இயற்பகை நாயனார் புராணம்


 

63 நாயன்மார்கள் வரலாறு

இயற்பகை நாயனார் புராணம்


மகத்துவத்தில் 
கங்கைக்கு 
மேலானது காவிரி.

அது சமுத்திரத்தில் 
சங்கமிக்கும் 
இடம் என்பதால் 
அந்தச் சோழநாட்டுச் 
சிறுநகர்
'காவிரிப்பூம்பட்டினம்' 
எனப் பெயர் பெற்றது.

அதற்குப்
'பூம்புகார்'
என்ற 
பெயரும் உண்டு. 

அவ்வூர் மக்கள் 
எதன் பொருட்டும் 
எல்லா வளமும் 
நிறைந்த 
அவ்வூரை விட்டு 
வேறு ஊர் புகார்
என்ற காரணத்தால்
 'பூம்புகார்'
எனப் பெயர் வந்தது.

அவ்வூரில் 
ஒரு 
சிவநேசச் செல்வர். 
ஈகையில் 
இணையில்லா 
வள்ளல்.

அவர் 
எவர் வந்து 
எது கேட்டாலும் 
இல்லை 
என்று சொல்லாது 
வந்தவரை 
மனம் குளிர 
அனுப்பி வைக்கும்
மாண்புடையார்.

வந்தவர் 
சிவனடியார் என்றால் 
பணிவோடும் 
பக்தியோடும் 
வழிபட்டு 
அவர் அகம் மகிழ 
விரும்பிய பொருள் 
தந்து வழியனுப்பும் 
அருளாளர்.

பொதுவாக 
உலக மாந்தர் 
கேட்பதை எல்லாம் 
தருவதையும் 
இருப்பதை எல்லாம்
வழங்குவதையும் 
வாழ்க்கையாகக் 
கொண்டிருக்க 
மாட்டார்கள்.

'தர்மத்திற்கும் 
எல்லையுண்டு...
தனக்கு மிஞ்சியே 
தான தர்மம்' 
என்றெல்லாம் 
நடைமுறைத் தத்துவம் 
உலகில் உண்டே!

'ஆற்றில் போட்டாலும் 
அளந்து போடு'
என்னும் 
வாழ்வியல் 
அறத்திற்கு மீறி 
தானம் வழங்குவது
உலக இயற்கைக்கு 
அப்பாற்பட்டது.
எதிரானது.
இயற்கைக்குப் 
பகையானதும் கூட.

எனவே அவரை 
'இயற்பகை நாயனார்' 
என்றே
காரணப் பெயரோடு 
ஊர் அழைத்தது.

இயற்பகை நாயனாரை சிவனடியார்களும் 
தம் சிரம் மேல் 
வைத்துப் போற்றிக் 
கொண்டாடினர்.

'என்னிடம் 
இருப்பதெல்லாம் 
சிவனுக்குரிய பொருளே. 
எனவே 
அடியார் கேட்பதை 
நான் ஏன், 
ஏன்? எதற்கு?
என்று கேட்டு 
வழங்க வேண்டும்?

சிவனே கேட்கிறான். 
அவனே பெறுகிறான்.
அவனே அனைத்தையும் 
இயக்குகிறான்.

இடையில் 
கேள்விகள் எதற்கு?'
என்ற 
சரணாகதித் தத்துவம் 
அவர் கடைப்பிடித்த 
சிவ வழிபாடு.

இயற்பகை நாயனார் 
வைசிய குலத்தைச் 
சேர்ந்த பெருமகனார்.
அவர் தொழில் வணிகம்.

ஈகை நிறைந்த 
வாழ்க்கை. 
மனை நிறைத்த 
அழகிய மனையாள்.

ஆரவாரமற்ற 
அற வாழ்க்கை.
புண்ணியம் சேர்க்கும்
தர்ம வாழ்க்கை.



வெண் பிறை சூடிய 
சிவபெருமானுக்கு 
இயற்பகை நாயனாரின் 
கீர்த்தியை 
உலகறியச் செய்ய 
விருப்பம் எழுந்தது.

விருப்பம் 
விளையாட்டாய் 
உருவெடுத்தது.

கூத்த பெருமான் 
ஒரு பழுத்த 
அந்தணர் 
வடிவம் எடுத்தார்.

உடலெங்கும் 
திருநீறு மயமாய்
பார்க்கப் பரவசப்படும் 
பாங்கினராய்
இயற்பகை நாயனார் 
இல்லம் வந்தார்.

ஆம்...
இயற்பகையின் 
அன்றைய விருந்தினர் 
இறையே.

ஓடோடி வந்து 
பாதம் தொட்டு 
வணங்கி 
"சுவாமிகள்
வந்தது என் பாக்கியம்.
நான் 
யாது செய்ய வேண்டும்?
உத்தரவிடுங்கள்."
பக்தி மேலிட வேண்டினார்.

ஆனால் 
அந்தணர் உருவில் 
வந்த அம்பலவாணரின் 
விருப்பம் அறத்திற்கு 
அப்பால் இருந்தது.
இயற்கைக்கு 
எதிராய் இருந்தது.

"மெய் அன்பனே... 
நான் எது கேட்டாலும் 
தருவேன் என 
நீ சத்தியம் செய்தால் 
என் விருப்பத்தைச் 
சொல்கிறேன்."

"கேளுங்கள்.. 
ஐயன்மீர்..!
எம்பெருமான் 
புண்ணியத்தில் 
தாங்கள் கேட்பது 
என் வசம் இருந்தால் 
மறுக்காது 
மறுசொல் கூறாது 
தந்து மகிழ்வேன்.

என்னுடையது என்று
ஏதுமில்லை. 
எல்லாம் சிவனுக்கு
உரியனவே."
ஆகாயத்தைக் கைகாட்டி 
அர்த்தத்தோடு 
வணங்கிச் சொன்னார்.

அந்தணரின் 
ஆழ்மனம் 
ஆச்சரியம் கொண்டது.

'இப்படி ஒரு மெய்யடிமையா!'

வியந்தார்.
அதேசமயம் 
தான் விருப்பப்பட்டதைத் 
தாமதிக்காது 
வினயமாகக் கேட்டார்.

"எனக்கு 
உனது இளம் மனைவி 
வேண்டும்.....!!!! " 

ஏனோ 
அருள் நிறைந்த 
அருட்தெய்வத்தின் கண்கள் 
காமம் கொப்பளிக்கச் 
சிவந்திருந்தன.

சிவனுக்கு 
எவனாவது நடிப்பு 
சொல்லித் தரவேண்டுமா 
என்ன!

ஆனால் 
ஒரு சந்தேகம் 
இச்சம்பவம் குறித்து
இன்று வரை உலவுகிறது.

'உமைக்குத் தெரியாமல் 
ரகசியமாக 
அவன் வந்திருக்கலாம்!'

யார் கண்டது?

பார்வதி தேவிக்குத்
தெரிந்திருந்தால் 
ஒரு பிரபஞ்சப் போரே 
நிகழ்ந்து இருக்குமோ 
என்னவோ!

அந்த சர்ச்சை
இருக்கட்டும் 
ஒரு புறம்.

விஷயத்திற்கு வருவோம்.

இறைக் கூத்தாடி 
விரும்பிக்
கேட்டது
இறையே 
எல்லாமுமாக இருந்த
இயற்பகை நாயனாரை
ஒரு கணம் கூட 
யோசிக்க வைக்கவில்லை.

அவர் மனைவி ?

'எனது மனைவியைத் 
தருகிறேன்'
என 
அந்தணருக்குத் 
தயக்கமின்றிச் சொன்ன
இயற்பகை நாயனார்
வீட்டினுள் சென்றார்.

அழகின் திருவுருவாய் 
அன்பின் இலக்கணமாய் 
பண்பின் அடைக்கலமாய் 
சமையல் வேலையில் 
இருந்த இல்லத்தரசி 
யாதெனக் கேட்டாள்.

இயற்பகையனார் 
அவளிடம் தயக்கமின்றி
"உன்னைக் கேட்கிறார்.. 
தானமாகக் கேட்கிறார்... 
தந்துவிட்டேன்.....
நீ அவருடன் புறப்படு..."

அத் தெய்வமகள் 
முதலில் அதிர்ந்தாள்.
ஒரு கணம் யோசித்தாள்.
பின் அமைதியாய்ச் 
சொன்னாள்.

"பிராண நாதா...
கணவனின் கட்டளையை நிறைவேற்றுவதே 
கற்புடையோர்
செய்ய வேண்டிய 
தலையாய கடமை
என அறிந்திருக்கிறேன்.

இதோ...
சிவனடியாருடன்
செல்ல 
இப்போதே
நான் தயார்..."

கட்டிய சேலையை 
சீர்படுத்திக்
கொண்டவாறே 
தயாரானாள்.
தாமதிக்காமல் புறப்பட்டு 
வெளியே வந்தாள்
பின்னாளில் 
புவனம் போற்றிய 
அம்மாதரசி.

"சுவாமி செல்லலாம்"
கணவனும் மனைவியும் 
ஒருசேரச் சொல்ல 
அந்தணர் 
அர்த்தப் புன்னகையுடன் 
புறப்பட ஆயத்தமானார்.

"சிவ மைந்தனே...!
இவளோடு 
நான் செல்கையில் 
உன் சொந்த பந்தங்களால் 
எங்களுக்குத்
தொந்தரவு வரலாம்.

ஊரும் 
அவர்கள் பக்கமே நிற்கும்.

எனவே....."

"மன்னிக்கவேண்டும்...
சுவாமிகளே...!
இதை யோசிக்காமல் 
நான் 
பிழை செய்ய இருந்தேன்.

நீங்கள் இருவரும் 
முன் செல்லுங்கள்.
ஈரடி தள்ளி 
பாதுகாப்பாக 
ஊர் எல்லை வரை 
நான் வருகிறேன்."

சொன்ன கையோடு 
ஆயுதச் சாலைக்குச் 
சென்று 
கைகள் நிறைய 
போர்க் கருவிகளுடன் 
போர்க்கோலம் 
பூண்டு வந்தார்
இயற்பகையார்.

கொடுத்துக் 
கொடுத்துச் சிவந்த 
அவர் திருக்கரங்களில்
உயிர் எடுக்கும்
உதிரம்
பீறிட வைக்கும்
கொலைக் கருவிகள்.

எதிர்பார்த்தபடியே 
உறவினர் பலர் 
எதிர்க்க வந்தனர்.

"மூடனே...
யாரேனும் 
மனைவியைத் 
தானம் தருவார்களா...?

அடேய்...பித்தனே....
பித்தம் 
தலைக்கேறி விட்டதா?
உனக்குத்தான் 
மானமில்லை.
எங்களுக்கு உண்டு.

நம் குலப் பெண்ணை 
போயும் போயும் 
ஓர் அந்தணருக்கா தருவது?

மானங்கெட்ட செயல்.
எங்களுக்கு 
மானமே பெரிது.

எங்கள் 
உயிரே போனாலும் 
பரவாயில்லை.

இந்தப் 
போலிச் சாமியாருடன்
போக இருக்கும்
இந்தப் பாவையையும் 
வர இருக்கும் 
பழியையும் 
மீட்டெடுப்போம்."

வில், வேல், வாள் 
கொண்டு 
தாக்கத் தொடங்கினர்.

அந்தணர் 
ஓரமாக நின்று
அத்தனை 
நிகழ்வுகளையும் 
பயந்த மாதிரி 
நடித்தபடி
ரசித்துக் கொண்டிருந்தார்.

"சுவாமி...
சிறிதும் பயப்படாதீர்கள்.. 
இயற்பகை
நம்மைப் பாதுகாப்பாகப் 
பார்த்துக் கொள்வார்."
மங்கை நல்லாள் 
அந்தணருக்குத் 
தைரியம் சொன்னாள்.

உறவினர்களிடமும் 
ஊரார்களிடமும்
உயிர்க் கொல்லிக்
கருவிகளுடன்
போராடத் துவங்கினார்
இயற்பகையார்.

ஒரு போரே 
நிகழ்ந்து முடிந்தது. 
போர்க்களம்
செங்களம் ஆனது.

தப்பி ஓடிய 
உறவினர்கள் தவிர 
மற்றவர்களின் 
தோள் கை கால்கள்
இரத்த வெள்ளத்தில் 
மாண்டு கொண்டிருந்தன.

"முட்டாளே...
இஃதொன்றும் 
வீர சாமர்த்தியம் 
இல்லை" 
என்று முனகினான் 
கடைசி  ஆளாகத் 
தப்பித்திருந்த
ஒருவன் தனது
கடைசி மூச்சில்.

ஊரின் எல்லை 
வந்தது.
'திருச்சாய்க்காடு' 
கோயில் அருகே 
இருவரையும் பாதுகாப்பாக 
இருக்கச் செய்துவிட்டுத்
திருப்தியுடன் 
திரும்பினார் இயற்பகை.

கொஞ்ச நேரத்தில் 
அந்தணரின் குரல் 
உரக்க ஒலித்தது...
"இயற்பகை முனிவா 
அபயம்...!
நீ திரும்ப வருவாயாக..! 
செயற்கரிய செயல் 
செய்த தீரனே...
விரைந்து வா."

அக்குரல் 
திருச்சாய்க்காடு கோயில் 
சுவரில் பட்டு 
அப்பகுதி முழுக்க 
எதிரொலித்தது.

திருக்கோயிலில் 
உறைந்து 
அருள்பாலித்துக் 
கொண்டிருந்த
அன்னையும் கூட
'அந்தணரைக் 
காணவில்லையே'
என அதிர்ந்து 
அடுத்த நிகழ்வுக்காகக்
காத்திருந்தாள்.

'பிழைத்தவர் 
யாரேனும் தாக்க 
வந்து விட்டார்களோ' 
என்று எண்ணிய 
இயற்பகை 
வாளெடுத்து
விரைந்து வந்தார்.

போர் தொடர
வாளோடு வந்தவருக்கு
பேரதிர்ச்சி!

ஆம்... 
அந்தணரைக் 
காணவில்லை.
'ஐயன்மீர்...'
ஆனமட்டும் 
கத்தி அழைத்தார்.

பதிலில்லை.

பூச்சூடி 
பூந்தளிர் போல்
கொள்ளை அழகுடன் 
மங்கை நல்லாள் மட்டும் 
பூங்காவனம் அருகே 
நின்றிருந்தாள்.

அவளிடம் 
அந்தணர் பற்றி 
கேட்டதற்கும் 
பதில் இல்லை.

'அவருக்கு ஏதாவது
தனது உறவினரால் 
கெடுதல் வந்துவிட்டதோ'
இயற்பகையாரின் 
கண்கள் எண்திசையும்
தேடிய வேளையில்...

வானில் 
ஒரு பேரொளி
இடி முழக்கத்தோடு 
செவிமடுக்க வைத்தது.

வானவர் 
பூமாரி பொழிய 
விற்பன்னர் 
வேதங்கள் முழங்க
ஞான முனிவர்கள் 
போற்ற 
ரிஷப வாகனத்தில் 
இறைச் செல்வரும்
அவருக்கு 
அருட்சக்தியாக விளங்கும் 
அன்னையும் 
தம்பதிக் கோலத்தில்
அருட்காட்சி தந்தனர்.

"அப்பழுக்கற்றவனே..! 
என்னிடம் ஈடில்லா
அடிமைத் திறன் 
கொண்டவனே!

'அன்பு மிகும் போது 
ஆராய்ச்சிக்கு இடமில்லை' 
என மனைவியையே 
தானம் தந்தவனே!

அறமில்லை எனினும் 
கேட்பவர் 
சிவனடியார் என்பதால் 
மறுக்காது 
மனைவியையே
ஈந்த மெய்யன்பனே!

உடம்பும் உயிரும் 
உறு பொருளும் 
சிவனடியாருக்கு உரியது 
எனும் உயர்ந்த 
சிவநெறி கொண்டவனே!

மனைவியை 
மனமகிழ்வோடு 
தானம் கொடுத்ததோடு 
அதற்கு 
இடையூறு இல்லாமல் 
போர்க்கோலம் பூண்டு 
நிழல்போல் காத்த 
அற்புத பக்தனே!

'கணவனே 
கண்கண்ட தெய்வம்'
என 
அவன் சொல் மீறாது 
மாற்றானுடன் 
வாழத்  துணிந்த 
பெண்ணரசியே...!

நீவிர் இருவரும் வாழ்க!
உமது அன்பையும்
அர்ப்பணிப்பையும்
நானும் உமையும்
மெச்சுகிறோம்.

பூமியில் 
இன்பப் பெருவாழ்வு 
வாழ்ந்து வாருங்கள்.
உரிய காலத்தில் 
சிவபுரம் 
அழைக்கப்படுவீர்கள்.

அங்கு வந்து 
மரணமில்லாப் 
பெருவாழ்வு 
வாழ்வீர்கள்!"

கடவுளர் 
வாழ்த்து மழை பொழிய
இயற்பகை நாயனார் 
பிறவிப் பயனடைந்த 
பெருமிதம் கொண்டார்.

அடுத்து
அந்த அதிசயம் 
அரங்கேறியது.

போரில் உயிர்நீத்த 
உறவினர்கள் 
உயிர்த்தெழுந்து 
முக்தி அடைந்து 
சிவபாதம் அடைந்தார்கள்.

'இல்லையே என்னாத 
இயற்பகைக்கும் அடியேன்'
என்று சுந்தரர்
போற்றி இருக்கிறார் 
என்றால் சும்மாவா?

அது சுந்தரர் தந்த
நிரந்தர சிம்மாசனம் 
அல்லவா!

மார்கழி மாதம் 
உத்திரம் நட்சத்திரத்தில்
உதித்த
இறையே விரும்பிய 
இயற்பகை நாயனாரின்
நிறைபாதக் கமலங்களை
வணங்கி வருவது
குறைவில்லா 
வாழ்வு தரும்.

நிறைவில்
இறையின் திருவடிகளின்
நிரந்தர நிழலும் தரும்.


ஓம் நமசிவாய!

மதிப்பாய்வு
பேராசிரியர் R. பாண்டியராஜ்
திருமதி.நந்தினி கிருஷ்ணகுமார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - கருவூரார் (பாகம் 1)

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - போகர் பிரான் (பாகம் 5)

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - சதாசிவ பிரம்மேந்திரர் (பாகம் 4)