ஏனாதி நாத நாயனார் புராணம்
63 நாயன்மார்கள் வரலாறு
ஏனாதி நாத நாயனார் புராணம்
புலிக்கொடி பறந்த
சோழநாட்டில்
கும்பகோணத்திற்குத்
தென்கிழக்கில்
அரிசிலாற்றங்கரையில்
சிவபுரி போல்
அமைந்திருக்கும்
அருள்மிகு ஊர்
எயினனூர்.
அவ்வூரில்தான்
அவதரித்தார்
ஏனாதி நாத நாயனார்.
ஏனாதி நாத நாயனார்
ஈழகுலச் சான்றார்
குலத்தைச் சேர்ந்தவர்.
கள் இறக்கும் சமூகம்.
சான்றார் என்பதே
காலப்போக்கில்
சாணார் என்று
மருவியதாகச்
சொல்வர்.
அக்காலத்தில்
சேனைத்
தலைவர்களுக்கு
ஏனாதியர் என்ற
பெயர் இருந்தது.
சங்க காலத்தில்
அரசர்கள்
ஏனாதியருக்கு
நெற்றியில் அணியும்
தங்கப் பட்டமும்
விரலுக்கு
ஏனாதி மோதிரமும்
அளித்து வருவதை
மரபாகக்
கொண்டிருந்தனர்.
இப்படிப்பட்ட
சிறப்பான குலத்தில்
தோன்றிய ஏனாதி நாதர்
சிவனிடத்தில்
பேரன்பு கொண்டவர்.
சிவக் கோலத்தில்
இருப்பவர்களைக் கண்டால்
மனம் நெகிழ்ந்திடுவார்.
நெற்றியில் திருநீறு
அணிந்தவர்களைப்
பார்த்த மாத்திரத்தில்
பரவசமாகி விடுவார்.
புனிதத் திருநீற்றை
முக்கீற்றாகப்
பூசுபவர்கள்
ஏனாதி நாதரைப்
பொறுத்தமட்டில்
பூசிக்கத்தக்கவர்கள்.
அதற்கு அவரிடம்
நிறையக்
காரணங்கள் இருந்தன.
திருநீறு
சிவபக்தியின்
புறச்சின்னம்.
அகம்பாவம்
சுயநலம்
மயக்கம்
என்ற
மும்மலங்களை
அழிக்க வல்லது.
பொன்னாசை
பெண்ணாசை
புத்திர பாசம்
ஆகிய
மூன்று ஆசைகளைத்
துறக்க வைப்பது.
உலகப்பற்று
சமய பேத
வாக்குவாதம்
மற்றும்
நம்பிக்கை
உடல் பற்று
ஆகிய மனச் சார்புகளைப் போக்கவல்லது.
தூல சரீரம்
ஆவி சரீரம்
காரண சரீரம்
ஆகிய மூவகை
உடல் பற்றுகளைக்
கடந்து நிற்கச் செய்வது.
விழிப்பு நிலை
கனவு நிலை
ஆழ்ந்த
உறக்க நிலை
முதலான
மூவகை
அவஸ்தைகளிலிருந்து
விலகி
இறைவனோடு
கலக்க வைப்பது.
பிணி நீக்கி
பிறப்பு இறப்பு
உள்ளிட்ட
எல்லா நோய்களையும்
நீக்கி
முக்தியைத் தரவல்லது.
இவை போன்ற
ஆன்றோர் வாக்கினைப்
பரிபூரணமாக நம்பியதால்
சிவ உருவமாகவே
பார்த்துப் பூசித்தார்
விபூதி பூசியவர்களை.
அவர்கள்
ஆசைப்பட்டால்
தன் உயிரைத்
தரவும்
சித்தமாக இருந்தார்.
அவரைப்
பொறுத்த மட்டில்
திருநீறு சிவனின் ரூபம்.
சிவப் பணிக்கு
அப்பால்
ஏனாதி நாதரின்
வருமானத்திற்கு
ஒரு தொழில் இருந்தது.
அது
அரச குடும்பத்தினருக்கும்
இளம் காளையருக்கும்
வாள் பயிற்சி
பயிற்றுவிப்பது.
அதில்
வரும் வருமானத்தில்
திருநீறு தரித்து
வருவோருக்கும்
சிவனடியாருக்கும்
உதவி உபசரணை
செய்து வந்தார்.
வேண்டியவர்
வேண்டாதவர்
நண்பர் பகைவர்
என்று பாராமல்
உதவி புரிந்து வந்தார்.
வாள் வலியும்
தோள் வலியும்
சிவ வலியும்
பெற்றிருந்த அவருக்கு
நாளொரு மேனியும்
பொழுதொரு வண்ணமும்
பேரும் புகழும்
பெருகி வந்தது.
மாணாக்கர் கூடினர்.
ஓய்வறியாது கற்பித்தார்.
ஊருக்கே உதவி வந்தார்.
எல்லோருக்கும்
இன்பம் தரும்
சந்திரன்
கள்வருக்கு
வெறுப்பைத் தரும்
அல்லவா?
நல்லவரின் வளர்ச்சியை
வெறுத்த புல்லன்
ஒருவன்
அவ்வூரில் இருந்தான்.
அதிசூரன்
எனப் பெயர்
பெற்றிருந்த அவன்
ஏனாதி நாதரின்
உறவினன்.
பங்காளி.
அவனும்
வாள் பயிற்சி
கற்பிக்கும்
தொழில்
செய்து கொண்டிருந்தான்.
அவன் வெறும்
வாய் வீச்சு வீரன்.
தற்பெருமைக்காரன்.
தனக்கு
ஒப்பாரும் மிக்காரும்
யாருமில்லை
எனக் கருதிய
தலைக்கனத்தான்.
வாள் வித்தை
பயிற்றுவிக்கும்
உரிமை தனக்கு மட்டும்
இருக்க வேண்டும் என பேராசைப்பட்டான்.
ஆனால்
அவனிடம்
கற்க வருபவர் எண்ணிக்கை
நாளுக்கு நாள் குறையவே
அத்தனை ஏமாற்றமும்
ஏனாதி நாதர் மீது
வன்மையாய்ப்
பொறாமையாய்ப்
பகையாய்
வெடித்த வண்ணம்
இருந்தது.
இந்த முறையில்லாப்
பகை காரணமாக
ஒரு நாள்
தன் உற்றாரையும்
தன்னிடம் கற்றாரையும்
கற்போரையும்
கொலைத் தொழில்
புரிவோர்களையும்
சேர்த்துக்கொண்டு படைக்கலன்களோடு வந்து
ஏனாதி நாதர்
வீட்டில் தனித்திருந்த
நேரம் பார்த்து
வீட்டின் முன் நின்று
போருக்கு அழைத்தான்.
அஞ்செழுத்தானை
நெஞ்சில் கொண்ட
அஞ்சா நெஞ்சரான
ஏனாதி நாதர்
தனித்தே தயாரானார்
போர் அறியா
பொய் வீரன்
அறைகூவலைக் கேட்டு.
இடுப்பில்
இறுகக் கட்டிய
கச்சையோடும்
காலில் கட்டிய
வீரக் கழல்களோடும்
ஒரு கையில்
வாளுடனும்
மறு கையில்
கேடயத்துடனும்
ராஜ சிங்கமாக
கர்ஜனையோடு
வெளியே வந்தார்
ஏனாதி நாதர்.
சிங்கத்தைச் சந்திக்க
சிங்கத்தின் குகைக்கே
வந்த குள்ள நரி போல
அதிசூரன்
நின்றதைக் கண்டு
சிரிப்புத்தான் வந்தது
ஏனாதி நாதருக்கு.
அதற்குள்
அக்கம் பக்கத்திலிருந்த
அவரின் உறவினர்களும் மாணவர்களும்
ஓடிவந்து
நிலைமை உணர்ந்து
ஏனாதி நாதர்
இருபக்கமும்
அரண் போல் நின்றனர்.
கூட்டத்தைப் பார்த்ததும்
பயந்து போன
அதிசூரன்
புத்திசாலித்தனமாய்
"ஏனாதியாரே...!
இங்கு வேண்டாம் சண்டை...
இப்போதும் வேண்டாம்...
சாலைக்கரைக்
குளம் அருகே உள்ள
திடலுக்கு வா...
அதுவே
இருவருக்குமான
பொது இடம்.
வாள் பயிற்சி
தரும் தகுதி
வெற்றி பெற்றவருக்கே"
என
நிபந்தனை விதித்தான்.
அவனே
நாளும் குறித்தான்.
அந்நாளில்
அதிசூரனின்
கூலிப்படையும்
ஏனாதி நாதரின்
வாள் படையும்
திடலில் கூடின.
உண்மையில்
ஒரு பெரும்
போரே நடந்தது.
எக்கச்சக்கமானோர்
கை இழந்தனர்.
கால் இழந்தனர்.
தலை இழந்தனர்.
தரைமண்
செங்குருதி
மயமாகியது.
பிணக் குவியலைக்
கழுகுகள் வட்டமிட்டன.
ஒரு கட்டத்தில்
உயிர் பிழைத்தோரும்
அதிவீரனும்
புறமுதுகிட்டுத்
தப்பியோடினர்.
அன்று இரவு
அதிசூரனுக்குத்
தூக்கம் வரவில்லை.
துக்கம்
தொண்டையை அடைத்தது.
அவமானம் மேலும் அவமானப்படுத்தியது.
நேருக்கு நேர் மோதி
வெற்றி பெற முடியாது
என நேர்மையாகத்
தீர்மானித்தான்.
ஏதேனும் தந்திரத்தால்
வஞ்சகத்தால்
வெற்றி பெறலாம்
என முடிவெடுத்தான்.
யோசித்தபடியே
தூங்கிப் போனான்.
மறுநாள்
ஏனாதி நாதருக்கு
ஒரு செய்தி
அனுப்பினான்
அதிசூரன்.
"எதற்கு
அனாவசியப் போர்?
அப்பாவிகள் ஏன்
உயிர் விட வேண்டும்?
நமது இருவருக்கும்
தானே பகை?
பக்கத் துணை
யாருமில்லாமல்
போர் செய்வோம்.
நானும்
தனித்து வருகிறேன்.
நீயும் தனியாளாய் வா.
ஒத்தைக்கு ஒத்தை.
பார்த்து விடுவோம்
ஒரு கை.
ஊர் எல்லையில்
இருக்கும்
காட்டுப்பகுதியே
சண்டைக் களம்.
வென்றவர் மட்டுமே
வருங்காலத்தில்
வாள் பயிற்சிக்கு
வாத்தியார்."
என்பதே
வந்த ஆள் சொன்ன
போர்முரசின் சாராம்சம்.
சொன்ன நாளில்
குறித்த நேரத்திற்கு
முன்னரே சென்று
காத்திருந்தார்
ஏனாதி நாதர்.
தனியாளாக
வருகிறானா...
இல்லை...
காட்டில் பலரை
முன்னேற்பாடாக
ஒளித்து
வைத்திருக்கிறானா
என நினைத்தாரே தவிர
ஆயிரம் பேர் வந்தாலும்
எதிர் கொள்ளத்
தயாராக இருந்தார்
ஏனாதி நாதர்.
அதிசூரனும்
அப்படி
ஒரு திட்டத்தில் தான்
இருந்தான்.
ஆனால் அதை விட
ஒரு பெரும்
சூழ்ச்சியின் சூட்சமம்
அவனுள்
பொறி தட்டியதால்
அத்திட்டத்தைக்
கைவிட்டான்.
ஏனாதி நாதர்
நாற்புறமும்
பார்வையைச்
சுழற்றியவாறே
காத்திருக்க
அதிசூரன்
ஒரு கையில்
வாளுடனும்
மறுகையில்
கேடயத்துடனும்
தனித்தே வந்தான்.
ஆனால்
ஏனோ முகத்தைக்
கேடயத்தால்
மறைத்தபடி
வந்தான்.
அவனைப்
பார்த்த மாத்திரத்தில்
ஓ(ம்)வென கத்தியவாறே
அவன்மீது
புலி போல் பாய்ந்தார்
ஏனாதி நாதர்.
கேடயம் அவன்
முகம் விட்டு நழுவியது.
முகத்தில் திருநீறு.
அதுவும் மூன்று கீற்று.
ஏனாதி நாதருக்குப்
போரிடத் தோன்றவில்லை.
'திருநீறு அணிந்து
சிவன் ஆகிவிட்டவனிடம்
வாட்போரா...?
தவறு.... தவறு
நல்லவேளை
வாளை வீசாதிருந்தேன்.'
கேடயத்தையும்
கூர்வாளையும்
தாழ்வாக்கி
அதிசூரனைப் பார்த்துப் புன்னகைத்தார்
ஏனாதி நாதர்.
திட்டம் பலித்து விட்ட
மகிழ்வில்
ஏனாதி நாதரை
வாள் வீசி
கொல்லத் துடித்தான்
அதிசூரன்.
அவன் அப்படி
செய்து விடுவானோ
என ஏனாதி நாதரும்
பயந்தார்.
ஒரு சிவ வடிவில்
இருப்பவருக்குக்
கொலை செய்த
பழி பாவம்
வந்துவிடுமோ
என்றுதான்
ஏனாதியார் பயந்தார்.
சிவ பக்தனுக்குத்
தோஷம்
வந்துவிடக்கூடாது
என்று அஞ்சிய
ஏனாதி நாதர்
போர் புரிபவர் போல்
கொஞ்சம் நடித்தார்.
சும்மா போரிட்டபடியே
அவனிடம்
தன் எண்ணம் சொல்லி
இனிமேல் அவனே
வாள் வித்தை
கற்பிக்கட்டும்
என்று உறுதி சொல்லி
வாட் போரை
நிறுத்தி விடலாம்
என நினைத்தார்.
ஆனால்
ஆத்திரக்காரனுக்குப்
புத்தி மட்டு
என்பதை
உறுதியாக்கும் வகையில்
ஏனாதி நாதரின்
நல்லெண்ணத்தைப்
புரிந்து கொள்ளாத
அதிசூரன்
அதிவீரன் போல்
ஏனாதி நாதரை
வாள் வீசிக் கொன்றான்.
ஜெயபேரிகை
கொட்டிய வண்ணம்
ஊராரிடம்
தம்பட்டம் அடிக்க
ஊருக்கு விரைந்தான்.
அப்போது
செஞ்சடை மின்னலிட
வெளிப்பட்டார்
இந்நாடகத்தின்
இயக்குனர்
சிவபிரான்
தேவியோடு.
"வெண் திருநீறு
அணிந்தவரெல்லாம்
சிவவடிவம் என
எப்பேதமுமின்றி
பேரன்பும் பெருமதிப்பும் கொண்டிருக்கும்
ஏனாதி நாதரே!
எனதன்பு
ஏனாதி நாத நாயனாரே!
விழித்திடு. எழுந்திரு."
ஆண்டவனின் கட்டளையை
அப்படியே ஏற்றார்
ஏனாதி நாத நாயனார்.
உயிர் பிழைத்து
உயிர்ப்போடு எழுந்து
தாள் பணிந்து
இறை வணங்கி நின்றார்.
"மெய்யன்பரே...!
வஞ்சகனின்
சூதை மீறி
திருமண்
அணிந்திருந்ததாலே
அவனை
என் போல் பாவித்துக்
கொலை ஏற்று
உலகப் பாசம்
அறுத்த அருளாளரே...!
நீர் என்றென்றும்
எம்மை விட்டுப்
பிரியாத வாழ்வைப்
பெறுவீராக!
வா....
சிவபுரி செல்வோம்"
என அழைத்தார்
சிவபுரித் தலைவர்.
காட்டிலிருந்த
ஓரறிவு முதல்
ஐந்தறிவு வரையிலான
ஜீவிகள் அனைத்தும்
வியந்து பார்க்க
வானிலிருந்து விழுந்த
மலர்களை நுகர்ந்தபடி
விண்ணில் பறந்து
மறைந்தார்
ஏனாதி நாத நாயனார்.
'வேடநெறி நில்லார்
வேடம் பூண்டு
என்ன பயன்?'
என்ற திருமூலர்
வாக்குப்படி
'சிவனடியார் போல்
பொய் வேடம் பூண்ட
அதிசூரன்
ஊர் தூற்ற வாழ்ந்து
பின்னரும் நரகத்தில்
துன்பமுற்றான்'
என்கிறார்
வாரியார் சுவாமிகள்.
கிபி 660-840 வாக்கில்
இயற்பகை நாயனார்
இளையான்குடி நாயனார்
ஏனாதி நாத நாயனார்
வாழ்ந்ததாக ஓர்
ஆய்வுக் குறிப்பு உள்ளது.
'ஏனாதி நாதன்றன்
அடியார்க்கும் அடியேன்'
என்பது சுந்தரர் வாக்கு.
ஓம் நமசிவாய!
மதிப்பாய்வு
பேராசிரியர் R. பாண்டியராஜ்
திருமதி.நந்தினி கிருஷ்ணகுமார்
கருத்துகள்
கருத்துரையிடுக