சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - போகர் பிரான் (பாகம் 5)


போகர் பிரான்

(பாகம் 5)

-மாரிமைந்தன் சிவராமன்

போகருக்கு
அவரது நீண்ட கால 
சித்தர் வாழ்க்கையில்
சந்தித்தவர்கள் எல்லாம் 
தரிசித்தவர்கள் எல்லாம் வலியுறுத்தியது 
தவத்தையே.

ஆனால் 
அதை ஏற்காமல் 
போகர் 
பயணித்துக் 
கொண்டே இருந்தார்.

அது ஏன்
என 
இப்போது அறிய 
ஆவல் எழலாம்.
இப்போது வேண்டாம்.
திவ்விய சரித்திரத்தின்
சுவாரசியம் 
குறைந்து விடும்.

மகா சித்தருக்கும் 
போகருக்கும் 
முன் குதித்த 
பதுமையும் 
அதைத்தான் 
சொன்னது.

தவத்தைத் தான் 
வலியுறுத்தியது.

அது ஒரு
பெண்
பொம்மை.

பதுமை என்பது
பெண்ணைக்
குறிக்கும்.

"போகா...
இனி எழும் உன்
சந்தேகங்களைப்
பதுமை நீக்கும்."
சொல்லியபடியே
சித்தர் மறைந்தார்.

புற்று
அவர்
உருவை
உள் கொண்டது.

பதுமை
பேசியது.
கருவின் ரகசியம்
வாழ்வின் மாயை
முக்தி நெறி
உபதேசித்து
மறைந்தது.

ஆயினும்
போகரின் 
தேடல் 
தொடர்ந்தது.

அவரின்
பேராசை
இறந்தவர்களை
உயிர்ப்பிக்கும்
கலையில்
இருந்தது.

அதற்கான
இலை 
தழைகளைத்
தேடியது.

"போகாதே!"
போகரைத்
தடுத்தது 
ஒரு குரல்.

"போவேன்"
என்ற
நிலையிலிருந்த
போகர்
ஏனெனக்
கேட்டார்
தடுத்த
பதுமையை.

"இப்பகுதி...
சித்தர்கள்
தவமிருக்கும்
பகுதி.

தப்பித் தவறி
உன் 
உடல் பட்டால்
அபாயம்
உனக்கு.

கால் பட்டால்
நீ
காலி...
போய் விடு."

"போய் விடுகிறேன்.
எனக்கு
இறந்தவரை
எழுப்பும்
மூலிகையைக்
காண்பி."

மறுத்த பதுமை
பிற
மூலிகை
ரகசியங்களைக்
கற்பித்து
மறைந்தது.

இப்போதும்
போகர்
நிறைவடையவில்லை.

இலக்கு
நோக்கி
இன்னும்
நடந்தார் 
தன் முயற்சியில்
மனம் தளரா
வேதாளம்
போல.

பதுமை
மறுத்தாலும்
சித்தர்கள்
மறைத்தாலும்
அம் மூலிகையை
அறிவது
என்பது
போகருக்கான
விதி.

விதி வழிப்
பயணத்திற்குச்
சித்தர்களும்
விலக்கல்ல.

சற்று தூரத்தில்
ஒரு
சமாதியைப்
பார்த்தார்.

அது
நான்கு யுகச்
சித்தர்களும்
ஒரே
இடத்தில்
லயமான
சதுர்யுக
சமாதி.

கனிந்துருகித்
தொழுதார்.
கண்ணீர்
உகுத்தார்.

வெளிப்பட்ட
சித்தர்கள்
போகருக்குப்
பலவித
மூலிகைகளை
உணர்த்தினர்.

கூடவே
உயிர் தரும்
மூலிகையையும்
உணர்த்தி
மறைந்தனர்.

லட்சியம்
நிறைவேறிய
மகிழ்வில்
போகர்
பீடு நடை
போட்டார்.

நடையின்
துள்ளல்
கொஞ்சம்
ஜாஸ்தி தான்.

அதனால்
பூமியே
அதிர்ந்தது. 

அவ்வதிர்வில்
அருகில்
குகையொன்றில்
தவமிருந்த
சித்தர் ஒருவரின்
தவம் கலைந்தது.

கடும் தவம்
கலையவே
கோபம் கொண்ட
அச்சித்தர்
போகர்
கற்ற வித்தையில்
இறந்தவரை
எழுப்பும் சித்தியை
மறந்து போகச்
செய்தார்.

ஒரு
விதி தந்தது.

இன்னொரு விதியோ
சதி செய்து
உள்ளதும் போச்சு
என்ற நிலையை
உருவாக்கிச் சிரித்தது.

விடாக்கண்டர்
விடாது
தொடர்ந்தார்.

போன இடம்
திருமூலரின்
பாட்டனார்
சமாதி.

மூத்த சித்தரான
அவரது
அறிவுரை
வேறாயிருக்கவில்லை.

"மனிதர்கள்
மாட்டு 
குணமுடையவர்கள்.
மடையர்கள்.

அவர்களிடம்
காட்டும் கருணை
விழலுக்கு 
இறைத்த நீரே.

அவர்களிடம்
முடிந்த வரை
விலகிப் போ.
தவத்தில் மூழ்கு."

மீண்டும்
சமாதி புகுந்தார்
மூலரின் பாட்டனார்.

அடுத்து
போகர்
தேடலில்
தரிசித்தது
அரிச்சந்திரர்
சமாதி.

"மக்களுக்குப்
பயந்துதான்
நான்
சமாதிக்குள்ளே
புகுந்தேன்.

இருண்ட மனமே
அவர்கள் மனம்.

அவர்கள்
இறவாமலிருக்க
நீ வழி தேடுகிறாய்.

தவமே 
உனக்கு உரியது."

அரிச்சந்திரர்
சொல்
அம்பெனப் 
பாய்ந்தும் 
போகர் 
மனதில் 
தைக்கவில்லை.



ஒரு
கால கட்டத்தில்
தேடலின் போது
அவருக்குக்
கிடைத்தது
பரியங்க 
யோகம்
எனும்
காய சித்தியின்
ஒரு நிலை.

அதன்
ரகசியம்
காமம் கலந்த
யோக ரகசியம்.

ஆணுக்கும்
பெண்ணுக்கும்
இறை படைப்பில்
ஓர்
அற்புத சக்தி
உண்டு.

பெண்களிடம்
அது அதிகம்.

மென்மையான
உடல்
இனிமையான
குரல்
உடல் முழுக்க
வசீகரம்
இவற்றிற்குக் காரணம் 
அச் சக்தியே.

பெண்களிடம்
ஊறும்
அமுத சக்தி
ஆடவர்
உடலில்
படிந்து பரந்து
தெய்வீகமாகப்
பாய்ந்தால்
ஆண்கள்
ஆயுள்
அதிகரிக்கும்.

இதுவே
பரியங்க யோகம்.
காய சித்தியடைய
ஒரு முறை.

இதில்
வல்லவர்
எனப்
பெயர் எடுத்தவர்
போகர்.

போகம்
அதிகம் 
என்பதால்தான்
போகர்
என்றே
பெயர் வந்ததாக
சிருங்காரக் 
கதைகளுண்டு.

சீனாவில்
இருந்த போது
கணக்கிலாச்
சீனப் 
பெண்களுடன்
கூடிக் 
களித்ததாலேயே
எலும்பும் தோலுமாய்
போகர் ஆனதாகச்
செய்தி உண்டு.

அவரை அழைத்து
வரச் சென்ற
புலிப்பாணியார்
தன்
தோள் மீது
அமர்த்தியே
திரும்பி வந்ததாகக்
கதையும் உண்டு.

போகர்
பரியங்க முறையை
வெளிப்படுத்த
விரும்பினார்.

உடன்
தடை வந்தது.

போட்ட இடம்.
பெரிய இடம்.
தலைமை இடம்.

(பாகம்-6 தொடரும்)

மதிப்பாய்வு
பேராசிரியர் R. பாண்டியராஜ்
திருமதி.நந்தினி கிருஷ்ணகுமார்

கருத்துகள்

  1. கருவூர் கணேஷ்5 மே, 2025 அன்று 3:49 PM

    உயர்திரு சிவா அண்ணா மிக அருமை 👏👌👍3பகுதிகளிலேயே சித்த பிரான்கள் வரலாற்றை வழங்க அன்புடன் வேண்டுகிறேன்🕉️👏🙏

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா6 மே, 2025 அன்று 4:28 PM

    மிக நீண்டதாக இருக்குமே ! அதனால்தான் நான்கைந்து பகுதிகளில் வெளியிட வேண்டி இருக்கிறது.

    இருப்பினும் உங்கள் கருத்தை ஏற்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா27 மே, 2025 அன்று 3:41 PM

    More updated details need it sir …

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - கருவூரார் (பாகம் 1)

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - சதாசிவ பிரம்மேந்திரர் (பாகம் 4)