சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - போகர் பிரான் (பாகம் 3)


 

போகர் பிரான்

(பாகம் 3)

-மாரிமைந்தன் சிவராமன்


போகர் பிரான்
காயகற்பம்
தயாரித்து
உட்கொண்டு
இறை அம்சமாய்
சீன தேசத்தில்
உலவி வந்த 
காலகட்டம்.

சீனத் தாத்தாவின்
உடலில் புகுந்து 
கிழவராய் 
உதித்தவர்
காயகற்பம் உண்டு 
கட்டிளம் காளையாய்ப்
பவனி வந்தார்!

முதலில்
காயகற்பத்தை
தான் விரும்பி
வளர்த்த
நாய்க்குக் கொடுத்தார்.
அது செத்து விழுந்தது.

விசுவாசச்
சீடன்
யூவுக்குத் (YU)
தந்தார்.
அவனும்
செத்தான்.

பார்த்திருந்த
சீடர்கள்
சிதறி ஓடிவிட
சிரித்தபடி
நாயையும் - அந்த
நல்ல சீடனையும் 
உயிர்ப்பித்தார்.

அந்தச் சீடன்தான்
அந்த 'யூ' தான்
புவி வணங்கும்
புலிப்பாணி
என்பது
ஆன்மிகச் செய்தி.

சீன மக்களை 
உய்விக்கச்
சீன அரசிலும்
அங்கம் வகித்தார்
லாவோட்சூ
உருவிலிருந்த
போகர் பிரான்.

அப்போதைய
மன்னர் காலத்தில்
ஆவணக் 
களஞ்சியத்தின்
காப்பாளர் பணியை
அலங்கரித்திருந்தார்.

தவோ-தி-சிங்
(Tao-te-ching)
என்ற நூல்
அவர் யாத்ததே.

காலப்போக்கில்
மன்னர் ஆட்சியில்
மனம் வெறுத்த
லாவோட்சூ
ஒருநாள்
அரண்மனையை விட்டு
சொல்லிக் கொள்ளாமல்
கிளம்பி விட்டார்.

அடையாளம்
கண்ட காவலாளி
அவரைத் தடுத்து
வணங்கி 
'எனக்கு ஏதேனும் 
உபதேசம் தாருங்கள்'
என
மன்றாடினார்.

அதுபோது
லாவோட்சூ
வழங்கியது தான்
மேற்படி
தவோ-தி-சிங்கின்
ஒரு சிறு பகுதி.

தவோ-தி-சிங்கை
சீன நாட்டின்
திருக்குறள் என்பர்
உலகில் சிறந்த
பன்மொழி வித்தகர்கள்.


குண்டலினியை 
எழுப்பி
ஓஜஸ் என்னும்
உள்ளொளியில்
கலந்து 
பேரானந்தம் 
அடைவதையே
சீடர்களுக்கும்
சீனர்களுக்கும்
போகர்
வலியுறுத்திய
யோகம்.

அதுவே 
உலக மாந்தர்
பிறவிப்பெருங்கடல்
நீந்த
அவர் கருத்தாய்ச்
சொன்ன
நீச்சல் தத்துவம்.

இந்த மிதத்தல் 
விதியே
மானுடப் படைப்பின் 
ரகசியம்.

எக்கச்சக்கச்
சீடர்களை
உருவாக்கிய பின்னர்
குரு எதிர்பார்த்த
உன்னத நிலையை
சீனாவும்
சீனர்களும்
அடைந்திருப்பதாகத்
திருப்தி கண்டார்
லாவோட்சூ .

4000 வருட
சீன
ஞான வாழ்க்கைக்குப்
பின்னர்
பாரதம் திரும்பச்
சித்தமானார்.

இமயமலை
மார்க்கமாக
பாரத தேசம்
வந்தார்.

சீனதேசமோ
அவர்
சொர்க்கத்திற்குச்
சென்றுவிட்டதாகக்
குறிப்பெழுதித்
தொழுதது.

உண்மைதானே!
'பாரதம்' என்ற
ஆன்மிக
சொர்க்கத்திற்கே
அவர் திரும்பியிருந்தார்.


ரசமணி
போகருக்கு
வந்த
எளிய சித்தி.

விண்வெளியில்
பறக்க
உதவும்
குளிகையே
ரசமணி.

வழக்கம் போல
பிற சித்தர்களுக்கும்
வாரி வழங்க
விரும்பினார் போகர்.

அதற்கு
ஆதி ரசம்
என்னும்
அதிசயம்
அதிகம்
வேண்டும்.

உரோமாபுரிக்குத்
தென்புறத்தில்
ரசக் கிணறு 
ஒன்று
இருந்தது.

அதன்
உரிமையாளர்
சிவபெருமான்.

போகர் பெருமான்
அங்கே
பறந்து போனார்.

இப்படி
யாரேனும்
வந்து
ஆதி ரசத்தை
அபகரித்துச்
சென்று
விடுவார்கள்
என
சிவபிரான்
காவல்
போட்டிருந்தார். 

காவல்காரர்கள்
எதற்கும்
துணிந்த
ராட்சதர்கள்.

போகர்
அவர்கள்
கண்களுக்குப் 
படாமல்
கிணற்றருகே 
சென்று
ஒரு
தேங்காய்க் 
குடுக்கையில்
ரசத்தை
எடுக்க முயன்றார்.

முதல்
அடுக்குப்
பாதுகாப்பை
மாயாஜாலம் 
செய்து
நுழைந்த
போகரை
அடுத்த
அடுக்கில் இருந்த
ரசமே ஏமாற்றியது.

போகர்
தேங்காய் 
மூடியில்
நிரப்ப 
முயற்சிக்க
ரசம்
சுருண்டு
பின் வாங்கியது. 

நெருங்கிய கையில்
அகப்படாது
விலகி ஓடியது.
ஓடி ஒதுங்கியது.

எண்ணெய்க்
கிணற்றின்
உரிமையாளர்
ஏக இறைவன்
அல்லவா!

அவரை
ஏமாற்ற முடியுமா
போகரால்?

ஆனால்
இறைவனின்
குடுமி
யாரிடம்
எனத்
தெரிந்தவர்
போகர்.

கண்களை மூடி
அன்னையை 
நோக்கி
தியானித்தார்.

அதன் பின்
அந்த 
சிவனையும்
தியானித்தார்.

அம்மன்
அருளிய
தம்பன
மந்திரத்தை
உச்சரித்தார்.

ரசம்
ஓடாமல்
நின்றது.
குடுவையில்
நிரப்பினார்
போகர்.

புறப்படும் போது
ராட்சதர்களிடம்
கையும் களவுமாக
மாட்டினார்
போகர்.

"சிவன்
சொத்தையே
கொள்ளை
அடிக்கிறாயா?"
சீறினான்
தலைமை ராட்சதன்.

"நான் யார்
தெரியுமா?
மூலரின் பேரன்.
மூலர்
சபித்தால்
நீ காலங்காலமாய்க்
கல்லாய்ப் போவாய்."

"நான் ஒருவன்
கல்லாய்ப் போனால்
பரவாயில்லை.

எனைப் போல்
ஆயிரமாயிரம் பேர்
சிவன் 
சொல் கேட்டு
காவல் காக்க
காத்திருக்கிறார்கள்."

அதற்குள்
ராட்சதர்கள் பலர்
போகரைச்
சூழ்ந்து 
கொண்டனர்.

சுற்றிலும்
கண்களைச்
சுழல விட்ட
போகர்
போட்டார்
வசிய மந்திரத்தை!

அத்தனை
ராட்சதர்களும்
வீரப் பொலிவிழந்து
சாதுக்களாக
மாறிப் போயினர்.

"ஏதேனும் அதிசயம்
செய்து காட்டுங்கள்
சுவாமி"
சரணடைந்தனர்
சாதுக்கள்.

அவர்களின்
முந்தைய 
விரைப்பையும்
அப்போதைய
பணிவையும்
ரசித்த
போகர் 
நன்றைக் குளிகை 
ஒன்றைக்
கடலில்
போட்டார்.

குளிகை
அத்தனை
நீரையும்
குடித்து விட
கடல் வற்றிப்
பள்ளமாகி
தரையே
தெரிந்தது.

வியந்த
ராட்சதர்கள்
"போதும்
சுவாமி...
பழையபடி
கடலை
உருவாக்கி
சீராக்குங்கள்"
வேண்டுகோள்
விடுத்தனர்.

அதற்கென்ன
என்கிற மாதிரி
இன்னொரு
குளிகையைக்
கடலினுள்
போட்டார்.

கடல் நீர்
பெருகி
ஒரு முழுக்
கடலானது.

சமுத்திரம் ஆனது.

அருள் கடலாம்
போகரை
வணங்கியவர்கள்
நடந்ததெல்லாம்
பரமனுக்குத்
தெரிந்தால்
தண்டனை
கிடைக்குமெனக்
கண்ணீர் விட்டனர்.

"கவலை வேண்டாம்.
அவனன்றி
ஓர் அணுவும்
அசையாது.
இதுவும்
இறைவன் சித்தமே"
என்றார் போகர்.

ஓடிப் போய்
ஒருவன்
தேங்காய்
குடுவையை
ஆதி ரசத்தால்
நிரப்பித் தந்தான்.

போகர்
புறப்பட்டார்.

'"சுவாமி...!
எங்களுக்கும்
குளிகை செய்து
தாருங்கள்."
ஒட்டு மொத்தக்
குரல் எழுந்தது.

'கண்டிப்பாய்'
என்றபடி
விண்ணில் பறந்தார்
ராட்சதர்களுக்கும்
ரட்சகராய்
ரசக் குளிகை
வழங்கும்
மனம் கொண்ட
போகர் பிரான்.

தேடிச் செல்வது.
கண்டடைவது.
கற்பது.
கற்றதெல்லாம்
போதிப்பது.
பெற்றதெல்லாம்
நூலாக்குவது.

கண்டுபிடிப்பை  
எல்லாம்
மக்களுக்கும்
சித்தர்களுக்கும்
காணிக்கையாக்குவது.

இவையே
போகரின் 
குணநலன்கள்.

மறைபொருள்
உட்பொருள்
பரிபாஷை
எல்லாம்
அவருக்கு
ஒத்து வராது.

'சவுக்காரம்'
என்பது
உயர்ந்த
விஷயம்.

பெருமையும்
அருமையும்
ரகசியமும்
கொண்டது
வெடி உப்பு
எனும்
சவுக்காரம்.

சவுக்காரத்தின்
அருமை
இன்று வரை
எவர்க்கும்
தெரியாது.

சவுக்காரத்தின்
பெருமையை
சிவ பெருமான்
உமையாளுக்குச்
சொன்னார்.

அன்னை
நந்திக்கு
உபதேசமாகச்
சொன்னார்.

நந்தி தேவர்
திருமூலருக்கு
உபதேசித்தார்.

திருமூலர்
காலாங்கி நாதரின்
காதோடு சொன்னார்.

இவ்வளவு
பாரம்பரியம்
கொண்டது
பரமனின்
பார்வையில் 
இருப்பது
சவுக்காரம்.

போகர்
பார்த்தார்.

'இதெல்லாம்
தப்பு...
இப்படி
மறைப்பது
மகா தவறு'
எனத் தீர்மானித்தார்.

வெளிப்படையாய்ப்
பாடலாக்கி
எல்லோருக்கும்
பார்வையாக்கி
விட்டார்.

பிரளயம்
வராத குறைதான்.
சித்தர்கள்
கொதித்தனர்.
சீறினர்.

'யாரிந்த
தேவ ரகசியத்தை
வெளியிட்டது?

அனைவருக்கும்
தெரிந்தால்
அகிலமே
சித்தர் மயமாய்
மாறிவிடும்.

இதற்கு
முற்றுப் புள்ளி
வைக்க வேண்டும்.'

சித்தர் கூட்டம்
விவாதித்தது.

'திருமூலரின்
பேரனாம்.
போகர்
என்று
பெயராம்.'
கூர்முனி
அறிந்ததை
அறிவித்தார்.

கூடிய
சித்தர்கள்
அகத்தியரின்
பார்வைக்கு
இவ்விஷயத்தைக்
கொண்டு போய்
தீர்வு காணத்
திட்டமிட்டனர்.

"நீங்களே
மூத்தவர்.
முடிவெடுங்கள்.
ஆவன செய்யுங்கள்"
சித்தர் குழு
அகத்தியரை
நிர்பந்தித்தது.

"போகரின்
போக்கே
அப்படித்தான்.

மக்கள்
மக்கள் நலன்
என்பதே
அவர் நோக்கு.
எம்பெருமான்
சிவபெருமான் தான்
தீர்க்க வல்லவர்.
வாருங்கள் 
போகலாம்.
நானும் 
வருகிறேன்."

அகத்தியர் 
அவர்களை 
தட்சிணாமூர்த்தியிடம் 
அழைத்துச் சென்றார்.

சிவ அம்சமாக
குரு வடிவில் 
இருக்கும் 
தட்சிணாமூர்த்தி
சாட்சாத் 
சிவபிரான் தானே!

இரு தரப்பும்
பிரபஞ்ச நீதிபதி
சிவபிரான்
முன் வைத்த
வாத 
பிரதிவாதங்களும்
முடிவில்
எல்லாம்
உணர்ந்தோனின்
தீர்ப்பும்....
அருள் அனுபவம்
தருபவை.


(பாகம் - 4 தொடரும்)

மதிப்பாய்வு
பேராசிரியர் R. பாண்டியராஜ்
திருமதி.நந்தினி கிருஷ்ணகுமார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - கருவூரார் (பாகம் 1)

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - போகர் பிரான் (பாகம் 5)

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - சதாசிவ பிரம்மேந்திரர் (பாகம் 4)