கண்ணப்ப நாயனார் புராணம் (பாகம்2)

 


63 நாயன்மார்கள் வரலாறு

கண்ணப்ப நாயனார் புராணம் 

(பாகம் 2)

மாரிமைந்தன் சிவராமன்


மறுநாள் காலை
சூரியன் 
உதிக்கும் நேரம்.
இறையனாருக்கு 
இரை 
தேடப் புறப்பட்டார்
திண்ணனார் ...
தனக்காக அல்ல 
தன்னை 
வசப்படுத்தியிருந்த 
இறைக்காக.

சிறிது நேரத்தில் 
பல்லாண்டு கால 
வழக்கப்படி
சிவகோசரியார்
என்ற 
பழுத்த அந்தணர்
சிவனாரைப் 
பூசிக்க வந்தார்.

ஆகம விதிப்படி 
அர்ச்சனை செய்யும் 
பழக்கமுடைய 
அந்தணர் 
தரையில் கிடந்த 
மாமிசத் 
துண்டுகளைக்
 கண்டு 
மனம் பதறினார்.
யாரோ 
ஒரு வன வேடுவன் 
செய்த பலி, 
பாவச்செயல் 
என சாபம் தந்தார்.

நடுங்கியபடியே 
மாமிசங்களை 
ஓரம் தள்ளி விட்டு... 
அருகில் இருக்கும் 
ஓர் அருவி சென்று 
குளித்துவிட்டுத்
தன் 
வாயைத் துணியால் 
கட்டிக்கொண்டு 
வண்ணப் பூக்கள் பறித்து
வாசனைத் திரவியங்கள்
சகிதம் வந்து 
பசும் நெய் பூசி 
மலர்ச்சூடி 
வில்வ இலை தூவி
அபிஷேகம் செய்து  
லிங்கேஸ்வரருக்குத்
தூய ஆடை கட்டிப் 
பூஜை செய்தார் 
அப்புண்ணியவான்.

அவர் கிளம்பிய 
சில நாழிகைகள் 
கழித்து 
திண்ணனார் 
வந்து சேர்ந்தார்.

முதல் நாள் போலவே 
செருப்புக் காலால் 
நாதர்முடி மேலிருந்த 
மலர்களைத் தள்ளி
வாயில் நிரப்பி வந்த 
திருமஞ்சன  நீரால் 
அபிஷேகம் செய்து
ஊனமுது படைத்தார்.

"ஐயனே...! 
நானே பக்குவமாய் 
தீயிட்டுச் சமைத்தேன்.
தேனிட்டுச் சுவைத்தேன்.

நேற்றதை விடவும்
இன்றைய மாமிசம் 
ருசியாய் இருக்கும்.
உனக்கும் பிடிக்கும்...சாப்பிடு."

மனம் உருகிச் 
சொன்னார் 
தன்னை மறந்த 
திண்ணனார்.

கதிரவன் மறைந்து 
இரவு வரவே 
அன்றிரவும்
காவல் காத்தார் 
ஒரு நொடி கூட 
இமை மூடாது.

இப்படியே சென்றன 
ஐந்து நாட்கள்.

இதற்கிடையில் 
ஒரு நாள் 
நாணன், காடன் 
கூற்றைக் கேட்ட
தந்தை நாகன் 
பதறி வந்தான் 
ஒரே வாரிசான 
திண்ணனாரிடம்.

கெஞ்சினான்.
கொஞ்சினான்.
ஆனால் 
கொஞ்சமும் 
மசியவில்லை
மந்திரித்து 
விட்டவர் போலிருந்த 
திண்ணனார்.

வேறு வழியின்றி 
கண்ணீரோடு 
விடைபெற்றான்
தந்தை நாகன்.

தினமும் நடக்கும் 
அசிங்கங்களையும் அலங்கோலங்களையும்
ஐந்து நாட்களுக்கு மேல் 
சிவகோசரியாரால் 
பொறுக்க முடியவில்லை.
அழுது புரண்டு 
ஆண்டவரிடம் 
புலம்பித் தீர்த்தார்.

"தயாநிதியே...!
உன்னருகே 
அசிங்கங்களைக் 
காணுமாறு 
என்னை ஏன் படைத்தாய்?

அப்படி என்ன பாவம் 
நான் செய்துவிட்டேன்?

புழுத்த நாயினும் 
கடையனாகிப் 
போனேனோ?"

வீடு திரும்பி
பிதற்றிய
வண்ணம் இருந்தார்.

கருணாமூர்த்தி 
அன்றிரவு அவர்
கனவிலே தோன்றினார்.

"சிவகோசரியாரே...!
என் மனதில் 
என்றும் நிலைத்து 
இருப்பவரே !!

இது என் 
விளையாட்டு தான்.

கவலை கொள்ளாதீர்.

நாளை காலை 
உன் பூசை 
புனஸ்காரங்களை 
முடித்துவிட்டு 
மறைந்திருந்து 
நடப்பதைக் கவனி.

உன் கேள்விகள் 
அனைத்துக்கும் 
விடை கிடைக்கும்.

அதற்கு முன் 
சில வார்த்தைகள்.

ஊன் உணவு 
படைப்பவனை 
வெறும் வேடுவன் 
என்று நினைத்து 
இகழாதே.

அவன் படையல் 
உன் 
ஆகமப் படையலை 
விட உயர்ந்தது.

அவன் உருவம் 
என் உருவே. 

அவன் அன்பு
என் மீதான அன்பே.
என் அன்பே.

அவன் அறிவு 
என்னை 
அறியும் அறிவே.

அவன் 
பூஜிக்கும் பூக்கள் 
தேவர்கள் வைத்து 
வணங்கும் மலர்களை 
விட உயர்ந்தவை.

அவனது 
மெய்யன்பு பேரன்பு.
இதுவரை நான் கூட அனுபவித்திராதது.

நாளை சந்திப்போம். 
மறைந்திருந்து கவனி. 
அவனது மெய்யன்பின் 
பேரணியை."

காளத்தியார் 
கண்கள் பேரொளியூட்ட விடைபெற்றார்.

மறுநாள் 
ஆறாம் நாள் காலை.

ஆவலோடு வந்தார்
சிவகோசரியார்.

மலையரசனுக்கு 
அபிஷேகம் செய்துவிட்டு மறைவிலிருந்து 
காத்திருந்தார் 
சிவக்கொழுந்தர்.

அன்று 
வேட்டையாடப் போன
திண்ணனாருக்கு 
மலைச் சாரலில்
சில இடங்களில் 
உதிரம் கொட்டிக் கிடக்க 
அவை கெட்ட சகுனங்களாக 
மனதைக் குழப்பின.

'தீது தனக்கா ?
தனையாளும் 
இறைவனுக்கா ?'
எனப் புரியாது 
கலக்கமுற்ற 
திண்ணனார்
'இறைவனுக்கு 
என்றால் 
என்னாவது?' 
என அஞ்சி 
விரைந்தோடி வந்தார் 
உச்சி மலையில் 
அருள்பாலித்துக் 
கொண்டிருந்த 
குடுமித் தேவரிடம்.

விரைந்து 
வந்த திண்ணனார் 
லிங்க பகவானைச்
சுற்றிச் சுற்றி வந்தார்.

பழுது ஏதும்
ஏற்பட்டுள்ளதா 
எனப் பலமுறை 
உற்றுப் பார்த்தார்.

ஊன்றிக் 
கவனித்த போது 
இறைவனின் 
வலது கண்ணிலிருந்து 
இரத்தம் கசிய 
ஆரம்பித்திருந்தது.

துடிதுடித்துப் போனார் 
கரடிகளையும் 
காட்டெருமைகளையும்
துடிதுடிக்கச் சாகடிக்கும்
வேடுவர் திண்ணனார்.

அவர் கண்களில் 
அலை அலையாய் 
கண்ணீர்.

'யார் செய்த தீங்கு இது?' 

சுற்றிச் சுற்றிப் பார்த்தார். 
சிறிது தூரம் சென்றும் 
தேடித் தேடிப் பார்த்தார்.

யோசனை வந்தவராய் 
மேலும் சில தூரம் சென்று 
தானறிந்த மூலிகைகளைக் 
கசக்கிய வண்ணம் 
இறை அருகே ஓடிவந்து 
மருத்துவம் பார்த்தார்.

இரத்தம் தொடர்ந்து வழிந்துகொண்டிருந்தது. 
மூலிகைச் சாறும் 
பலனளிக்காது
குருதி அதிகமானது.

அதுபோது 
இளம்பிராயத்தில் 
கற்பித்தவர் சொன்ன சொலவடையான 
'ஊனுக்கு ஊன் 
உற்ற நோய் தீர்க்கும்'
என்பது 
நினைவுக்கு வந்தது.

உடனே அம்பு எடுத்தார்.

தனது வலக் கண்னைத் 
தோண்டி எடுத்து 
கைகள் நடுங்கியபடி 
இறைவனின் 
குருதி பொங்கிய
வலது கண்ணில் 
பொருத்தினார்.

என்ன ஆச்சரியம்!

அப்படியே பொருந்தியது 
அவர் கண்ணும் 
இறையின் கண்ணும் 
ஒன்று என்பதுபோல்.

நிம்மதிப்
பெருமூச்சு விட்டவர் 
தன் 
கண், ரத்தம், வலி 
உணர்ந்தாரில்லை.

இறைவனின் 
வலது கண்ணிலிருந்து வந்துகொண்டிருந்த 
இரத்தப் பெருக்கு நின்றது.

திண்ணனாரும் 
மறைவில் இருந்த 
சிவகோசரியாரும் 
மகிழ்ந்தபடி 
வணங்கியிருந்த 
நொடிகளில்....

இறைவனின் 
இடது கண்ணிலிருந்து
 இரத்தம் 
பீறிடத் துவங்கியது.

இப்போதும் 
திண்ணனார் 
யோசிக்கவில்லை. 
உடனே
தனது இடது கண்ணைப் பெயர்த்தெடுக்க முற்பட்டார்.

அப்போது அவருள் 
ஒரு கேள்வி எழுந்தது.

ஏற்கனவே 
வலது கண் 
பார்வை இழந்த நிலையில் 
இடது கண்ணையும் 
எடுத்துவிட்டால் 
இறையுடன் 
பொருத்த வேண்டிய 
இடம் தெரியாதே!
என்ன செய்வது?

யோசித்த 
அதே கணத்தில் 
பதிலும் கிடைத்தது.

தனது 
ஒரு காலைத் தூக்கி 
இறையின் 
இடது கண்ணில் 
கால் விரலை
ஒற்றி வைத்துக் கொண்டார். 

கால் விரல் 
இருக்கும் இடத்தில் 
தன் கண்ணைப் 
பொருத்தி விடலாம் 
எனக் கருதி 
அகமகிழ்ந்து 
இடது கண்ணை 
பெயர்த்தெடுக்கப் போனார்.

இறைவனுக்கே 
அது பொறுக்கவில்லை.

"நில்லு கண்ணப்ப!
நில்லு கண்ணப்ப!!
என் அன்புடைத் தோன்றல் 
நில்லு கண்ணப்ப!!!"
என்று மூன்று முறை 
அன்பொழுக அழைத்து
தடுத்து நிறுத்தினார் 
காளத்தியப்பர்.

உடன்
திண்ணனாரை ஆட்கொண்டு 
'என் வலப்பக்கம் 
எப்போதும் இரு' 
என ஆசீர்வதித்து 
வாரி எடுத்து 
இறுகணைத்துக் 
கொண்டார் 
உலகாளும் 
திருக்காளத்தி நாயகன்.

இறைவனே 
மூன்று முறை 
அழைத்ததாலேயே 
திண்ணப்பர் 
கண்ணப்பர் ஆனார்.

சிவகோசரியார் 
'கருணைப் பெருங்கடலே..
பேரன்பின் பெரு ஊற்றே' 
என்று இறையோடு 
கலந்த கண்ணப்பரையும்
நினைவு தெரிந்த 
நாளிலிருந்து 
நொடிதோறும் தொழும் காளத்தியாரையும் 
ஒரு சேர வணங்க 
இருவரும் வானேகினர்
வானவர் பூமழை பொழிய.

முக்கண்ணருக்கே 
இடது கண் கொடுத்த
இரு கண்களையும் 
தர விருந்த 
கண்ணப்ப நாயனாரை காலமெல்லாம் 
உலகம் மாந்தரும் 
உலவும் ஞானியரும் 
தொழும் ரகசியம் இதுவே.

கண்ணப்ப நாயனார் 
மூலம் 
இறை விடுக்கும் 
ஆன்மிக அறிவிப்புகள் 
கூர்ந்து 
கவனிக்கத்தக்கன.

அகம்பாவம் 
என்னும் 
தப்பியோடிய 
காட்டுப் பன்றியைக் 
கொன்றதன் மூலம் 
அகம்பாவம் அழித்தார் 
கண்ணப்ப நாயனார்.
அதனால் 
உயர்ந்த பக்தி 
உற்பத்தியானது
அடுத்த நிகழ்வு.

உடன் வந்த 
நாணனையும் 
காடனையும் 
நன்றும் தீதும் 
எனக் கொள்ளலாம்.

தீது எனும் காடன் 
காட்டுப்பன்றியை 
அவித்ததோடு 
ஆற்றோடு 
பின்தங்கிப் 
போனான்.
நன்று என்னும் 
நாணன் 
இறைவனின் 
பெருமையை 
எடுத்துரைக்க 
முடிந்ததே தவிர 
அவனால் 
துந்துபி ஓசையைக்
கேட்க முடியவில்லை. 
இடையிலேயே 
அவன் விடைபெற்றது 
யோசிக்கத் தக்கது.

சாதகரான 
கண்ணப்பர் மட்டுமே 
இறை அழைக்கும் 
பேறு பெற்றார்.
என்றும் இறையின்
வலப்பக்கம் இருக்கும் 
பெரும் பேறு பெற்றார்.

கண்ணப்ப நாயனாரின் 
அன்பும் அர்ப்பணிப்பும் 
நிறைந்த 
பக்திக்கு முன்னர் 
ஆன்மிகம் செறிந்த சிவகோசரியாரின்
வெறும் சடங்குகள் 
அடுத்த நிலைக்கே 
சென்றன.

உண்மை பக்தி
சடங்குகளைக் காட்டிலும் 
உயர்ந்தது என்பதே 
இறை 
உணர்த்தும் உண்மை.

ஆகம நெறியினும் 
அன்பு நெறியே சிறந்தது.

கண்ணப்பரின் பக்தி 
மூட பக்தி அல்ல. 
அது அன்பின் ஊற்று.

இறைவன் 
காட்சியளித்தபோது 
கண்ணப்பர் 
இறைவன் முன்பு 
நின்றிருந்தார்.
சிவகோசரியாரோ 
மறைவாக 
மரத்தின் பின் தான் 
நின்றிருந்தார்.

இறைவன் 
எத்தனை காலம் 
தன்னைத் தொழுதான் 
எனக் கணக்குப் 
பார்ப்பதில்லை.
ஆறே நாளில் 
கண்ணப்பரை 
அரவணைத்தது 
கண்கூடு.

தத்துவப் படிகளைத் தாண்டி 
சிவ தத்துவத்தைச்
சென்றடைந்த
கண்ணப்பரின் 
ஊனமுதை இறைவன் வெறுக்கவில்லை.

இது கண்ணப்பரின் 
சரணாகதித் தத்துவத்தின் 
வெற்றி.

இவையால் தான்
கண்ணப்பரின் 
புகழ் பாடாத 
ஆன்றோரோ சான்றோரோ 
இல்லை.

'நாளாறிற் கண்ணிடந்து 
அப்ப வல்லேன் அல்லேன்' 
எனப் பாடுகிறார் பட்டினத்தார்.

'நெற்றிக்கண் திறப்பினும் 
குற்றம் குற்றமே' 
என்று முக்கண்ணரிடம் 
வாதப் போர் புரிந்த 
நக்கீரத் தேவர் 
'திருக்கண்ணப்ப தேவர் மறம்' 
என்ற நூல் அருளியிருக்கிறார்.

சமயக் குரவர் 
நால்வரும் 
அருணகிரியாரும் 
ஆதிசங்கரரும் 
தாயுமானவரும் 
கண்ணப்பரின் 
மெய்யன்பைப் 
போற்றி வணங்குகின்றனர்.

'கலைமலிந்த சீர் நம்பி கண்ணப்பற் கடியேன்'என்பது சுந்தரரின் திருவாக்கு.

ஓம் நமசிவாய!

(கண்ணப்பர் நாயனார் புராணம்- நிறைவு)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - கருவூரார் (பாகம் 1)

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - போகர் பிரான் (பாகம் 5)

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - சதாசிவ பிரம்மேந்திரர் (பாகம் 4)