சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - கருவூரார் (பாகம் 4)

 


கருவூரார் (பாகம் 4)

-மாரிமைந்தன் சிவராமன்

ஆனிலையப்பரை ஆரத்தழுவிய கருவூரார்

ஒவ்வொருவரின் 
கர்மவினைக்கு 
ஏற்பத்தான் 
மண், பொன், பெண் 
கிடைக்கும் 
என்பது
கருவூராரின் 
உபதேசம்

கருவூரார் 
அருளிய 
வாத காவியம்
யோக ரகசியங்கள்
நிரம்பியது.

ஓலைச்சுவடியில்
அத்தனை
எளிமையாய்
அதற்கு முன்
யாரும்
படைத்ததில்லை.

இது
மற்ற சித்தர்களுக்கு
எரிச்சலைத் தந்தது.

'எளிமையாய்ச்
சொல்வது 
எந்த வகையிலாவது 
தீயோர்
கைகளுக்குச் சென்றால்
என்னாவது?'
எனப் புகைந்தனர்.

திருமூலர்
தலைமையில் 
சித்தர்கள் கூடி 
கருவூராரை 
எச்சரித்தனர்.

"தீயோருக்கு 
இச்சுவடிகள் 
அகப்படாது.
மீறிப் படித்து 
பொருள் புரிந்தாலும் 
கைகூடாது.
அப்படியொரு 
சாபம் உள்ளது"
என்றார் 
திருமூலர் கூட்டிய
கூட்டத்தில்
கருவூரார்.

அவரது பதில் 
சித்தர்களுக்குத்
திருப்தி 
தரவில்லை.

அதனால்
திருமூலரிடமே 
சுவடிகளைத்
தந்துவிட்டார் 
கருவூரார்.

அப்போதைக்குப்
பாதுகாப்பான
அரிய சுவடிகளுக்கு
ஒரு முறை
ஆபத்தும் வந்தது..

ஒரு தடவை
திருமூலர் 
கூடு விட்டு
கூடு பாய்ந்து 
செத்துப் போயிருந்த 
அரசனாய் 
மாறியிருந்தார்.

அப்போது 
தனது மூல உடலை
ஒரு குகையில் 
மறைத்து வைத்துவிட்டுச் 
சென்றிருந்தார்.

நடந்ததை 
அறிந்து கொண்ட 
ராணியார் 
குகையிலிருந்த 
மூலரின்
உடலை
எரித்துவிட்டால்
மூலர் 
தன்னிடமே இருப்பார்
என்று எண்ணி 
சாதுர்யமாக
அதற்கான ஆட்களை 
ரகசியமாக
அனுப்பி வைத்தாள்.

இதை
ஞான திருஷ்டியில் 
உணர்ந்தார்
கருவூரார்.

அரசியின் 
ஆட்களுக்கு முன் 
குகைக்குச் 
சென்று 
தான் ஏற்கனவே 
அருளி 
மூலரிடம் 
ஒப்படைத்திருந்த
வாத காவியத்தை 
மீட்டார்.
பின் மக்களுக்கு 
அளித்தார்.

அதுவே 
இன்று இருக்கும்
வாத காவியத்தின் 
அசல் பிரதி.

குழந்தைப்
பருவத்திலிருந்தே 
சித்தர்கள் பழக்கம்
போகுமிடமெங்கும்
சிவநெறி  முழக்கம்

தெய்வச் சிலைகள் 
செய்வதும் 
செல்லுமிடந்தோறும்
சிவலிங்கம்
வைப்பதும் 
தங்க 
விக்கிரகங்கள்
படைப்பதும் 
பரம்பரைத்
தொழில்.

ஸ்ரீரங்கத்து
அரங்கனும் 
நெல்வேலி 
நெல்லையப்பரும்
திருப்புடைமருதூர் 
நாறும்பூநாதரும்
ஸ்ரீமன் நாராயணனும்
விரும்பிய பக்தர்.

அடிப்படையில்
அம்பாள் பக்தர்
அவள் உபாசகர்.
சக்தி மிகுந்த சித்தர்.

ஈசனே 
இஷ்டங்கொண்டு
முக்தி அளித்த
ஜீவன் முக்தர்.

அரைக் கோடி
ஆண்டுகள் 
சமாதியிலிருந்து 
அருள்பாலித்த 
மகா சித்தர்.

குபேரனை விட 
பொருட்செல்வம் 
பெற்றிருந்தவர்.

ஆம் ....
கோடி 
தங்கச் சிவலிங்கங்கள்
வைத்திருந்த 
கோடீஸ்வரச் சித்தர்.

இப்படி
ஆயிரம் பெருமைகள் 
இருந்தும்
அற்புதச் சித்திகள்
ஆயிரமாயிரம் இருந்தும்
தேவரிஷி 
எனப்
போற்றப்பட்டிருந்தும்
கருவூராருக்கு
ஊரில் -
கருவூரில்
அவ்வளவு மதிப்பில்லை.

கருவூரார் வாத காவியம்
கருவூரார் வைத்தியம் 
கருவூரார் பூரண ஞானம்
கருவூரார் சிவஞானபோதம் 
உள்ளிட்ட 
ஞான நூல்களை
அருளிய அருமை 
உள்ளூரில் எடுபடவில்லை.

அது மட்டுமா ?
300
வயது வாழ்ந்த 
கருவூரார்
மொத்தம் 718 நூல்களைப் 
படைத்தார்

(அதில்
40
மட்டும்
கிடைத்துள்ளதாகக்
குறிப்பொன்று
சொல்கிறது.

இதில் 13 நூல்களே 
அச்சில் ஏறின.

நம் கையில்
கிடைப்பன 
மற்றவை.
அவை
ஓலைச்சுவடிகளே!)

சிதம்பரம் 
திருக்களந்தை ஆதித்தேச்சரம் 
திருக்கீழ்க்கோட்டூர் மணியம்பலம்
திருமுகத்தலை
திரைலோக்கிய சுந்தரம் 
கங்கைகொண்ட சோழேச்சரம் 
திருப்பூவணம் 
திருச்சாட்டியக்குடி 
தஞ்சை ராஜராஜேஸ்வரம்
திருவிடைமருதூர்
எனப் பத்து
சிவத்தலங்கள்
தோறும் 
யாத்திரை செய்து 
சிவனைப் போற்றிப்
பாடிய பதிகங்களே
திருமுறையில்
நிறைந்துள்ளன

அவையே
பன்னிரு திருமுறையில்
9 -
ஆவதாக
வீற்றிருக்கின்றன.
அதுவே 'திருவிசைப்பா'!

அவற்றின் 
மொத்த பாகங்கள் 301.
அவற்றில்
103
பாகங்கள்
கருவூர்த் தேவரின்
கன்னல் பாடல்கள்.

இப்படிப்
பத்து பதிகங்கள்
பாடிய பெருமைக்குச்
சொந்தக்காரர்
கருவூர்ப் பெருமான்.

'கருவூரார்
பூஜாவிதி'
பாடல்கள்
முப்பதும்
இலக்கியம் 
போற்றும் 
சிறப்புடையது

இவ்விதம் 
எல்லாம்
ஆன்மீக
உலகமே 
போற்றிப்
பாராட்டும்
சீராட்டும்
கருவூராருக்கு
உள்ளூரில் 
அவமானம் ...
பொறாமை...

வேதியரே
வெறுத்தார்கள்.
வெறுப்பை 
உமிழ்ந்தார்கள்.

"கறி உண்ணும்
கள்ளுண்ணும் 
கருவூராருக்கு 
என்ன தெரியும்?

சாதி பார்ப்பதில்லை
சகஜமாய்ப் பழகுகிறான்.

இறைத்தொண்டு 
என்பது 
பூஜை 
புனஸ்காரமே!

இவன் என்னவோ 
தவம்
சித்தி 
என 
அலைகிறான்!

அபசாரம்....!
அபசாரம்.....!"

எள்ளல் 
கேலி என
வெறுப்பைக் 
காட்டி வந்தனர்.
 
இத்தனைக்கும்
ஊரில் இருக்கும்போது
கருவூரார் யாருடனும்
அதிகம்
பேச மாட்டார்

மௌனம்
கடைப்பிடிப்பார்

உண்மையில் 
அவர் 
சிந்தனை
பக்தியை விட
சித்தியைத் தேடியது.

சக 
வேதியரின்
அடாவடிப் பேச்சை 
அடக்க
ஒரு முறை 
பட்டப்பகலில்
இருள்படர வைத்து
விண்ணில்
இடி மழை 
வரவழைத்தார்.

பூதம் ஒன்றை
மழையில் தனக்குக் 
குடைப் பிடித்து
வரச் செய்தார்.

அமராவதி 
ஆற்றில் வெள்ளம் 
கரைபுரளச் செய்தார்.

திறவாதிருந்த
ஆனிலையப்பர் 
ஆலயக் கதவைத்
தானே திறக்கச் செய்தார்.

சூரியனின்
வெம்மையைத்
தணித்துக் காட்டினார்.

வேதியர் 
பொறாமைத் தீயில்
பொங்கி எழுந்தனரே 
தவிர 
கருவூராரை
ஏற்கவில்லை‌.

ஏளனமே பேசினர்.
பஞ்சபூதங்களும்
அவருக்குப்
பணிந்த
செயல்களைக் 
கண்டும் பயந்தாரில்லை.

சக வேதியர்
தந்த துயரம் 
உள்ளூரக்
கருவூராரை
வேதனைப்படுத்தியது.

'மக்கள்
அப்படித்தான்
இருப்பார்கள்.
அவர்களைப்
பொருட்படுத்தாதே!
உன்
உதவிகளைப்
பேதம் பாராது
செய்து வா...'என
போகர் கூட
உபதேசித்தார்.

மக்கள் பற்றிய
கவலையோடு 
கங்கைகொண்ட 
சோழபுரம்
போனார்.

இறையிடம் 
முறையிட்டார்
பாடலாய்

பெருவுடையார்
பிரகதீஸ்வரரே
நேரில் வந்து
காட்சி தந்து
கருவூரார்
தலை மீது 
கை வைத்து
தீட்சை தந்தார்.

"கருவூர்
செல்!
உன் சொல் 
மக்களுக்கு 
உதவட்டும்..!"
என
சிவனே
கருவூருக்குத் தான்
திரும்ப 
அனுப்பி வைத்தார்.

கருவூரார்
இறுதியில் 
கருவூர்
வந்தார்

பழம்பகை 
பரம்பரைப்
பகை போல் 
சாகாமலிருந்தது
வேகாமலிருந்தது.

வேகமாயிருந்தன 
வேதியர் செயல்கள்.

கருவூரார் 
மீண்டும் 
சலிப்புற்று
வெறுப்புற்று 
கரூர் அருகே
வெண்ணைமலை 
சென்று 
ஒரு குடில்
அமைத்து 
தவ வாழ்க்கையை
மேற்கொண்டார்.

தவத்தில்
வந்த
பசுபதீஸ்வரர்
"
கரூர் செல்..!
அடுத்த நிலை
காத்திருக்கிறது.."
எனக் 
காதோடு
சொன்னார்.

கடவுளின் திட்டம் 
இயற்கையின் சட்டம்
என்பதால்
கருவூரார்
கருவூர் 
திரும்பினார்.

அங்கே
கருவூர் ஆனிலையப்பர்
கருவூராரை அரவணைக்க
நாள் குறித்துக் காத்திருந்தார்.

வேதியர்களின் 
ஏச்சும் பேச்சும்
நாளுக்கு நாள் 
அதிகரிக்கத் தொடங்கியது.

'ஆச்சாரமற்றவன்!
கள் குடிப்பவன்!
மாமிசம் தின்பவன்!'
என்றெல்லாம் 
புகார் மேல் புகாராய் 
மன்னரிடம் 
போய்ச் சேர்ந்தது.

மன்னன் 
விசாரித்தான்.
அதிரடி
சோதனை கூட
மேற்கொண்டான்.

உண்மையில்
கருவூரார்
இல்லம்
பக்தியாய்
இருந்தது.
பக்தி மணம் 
கமழ்ந்தது.

மாறாக 
புகார்
சொன்ன
வேதியர்கள்
வீட்டிலே தான்
மது மாமிசம் என 
அத்தனை
அதர்மங்களும்
துர் மணம் 
பரப்பின.

வேதியரைக்
கோபித்தான்
மன்னன்.

அதுபோதும் 
திருந்தவில்லை 
வேதியர் கூட்டம்.

சமயம்
கிடைக்கும் போது
கருவூராரை
அடித்துக் கொல்லவே 
திட்டம் தீட்டினர்.
 
அதற்காக
கத்தி கம்போடு
காத்தும் இருந்தனர்.

அதற்கு
ஒரு நாள் 
வாய்த்தது.

அமராவதிக் கரையில்
ஏகாந்தமாய்
குளித்துக் கொண்டு
இருந்தார்
கருவூரார்.

திடீரென ஒரு கூட்டம்
அங்கு வந்தது
ஆற்றங்கரையிலிருந்து
கருவூராரை
ஆனிலையப்பர்
கோயில் வரை
ஓட ஓட
துரத்திச் சென்றனர்

கொலை வெறியோடு!
கத்தி கம்புகளோடு!

அவர்கள்
விதிப்பலனை
முன்கூட்டியே புரிந்திருந்த
முக்காலமும் அறிந்திருந்த 
கருவூரார் 
தன் 
வினைப் பயனால்
பயந்தவர் போல் 
ஆனிலையப்பர் கோயில் 
நுழைந்து
மூலஸ்தானம் நெருங்கி
ஆனிலையப்பரிடம்
தஞ்சம் அடைந்து
ஒப்பில்லாதவனை
ஆரத் தழுவினார்.

இறைவனின் விருப்பமும் 
அதுதான் என்பதால்
அக்கணமே
இறையோடு 
இரண்டறக் கலந்தார்.
நிறைவானார்.
இறையானார்.

இக்காட்சியைக்
கண்டு 
கொலை வெறியோடு
துரத்தி வந்த
வேதியர்கள்
மிரண்டனர்.
பயந்தனர்.

'பாவம் செய்துவிட்டோமே!'
எனக் கதறினர்.
பசுபதீஸ்வரரிடமே
கண்ணீர் விட்டு
பாப விமோசனம்
வேண்டி நின்றனர்.

பின்னர்
பாவ பரிகாரத்திற்கு
வேதியர்
அத்தனைப் பேரும் 
கருவூராருக்கு
கோயிலிலேயே
தனிச் சன்னதி 
அமைத்தனர்

அருள்மிகு 
ஆனிலையப்பர் 
கோயில்
சன்னதியில்
இன்றும்
பேரருளோடு 
ஆட்சி செய்கிறார் 
கருவூரார்.

கருவூரார்
திருக்காளஹஸ்தியில்
லயமானதாக 
ஒரு செய்தி உள்ளது.

அகத்தியர் பெருமானை
தரிசிப்பதற்காகவே
பொதிகை சென்ற
கருவூரார்
குருபக்தியுடன் 
அவருடனேயே
பலகாலம் தங்கி
ஞானோபதேசங்கள் பல
பெற்றதாக
கருவூர்த் தலபுராணம்
விரித்துரைக்கிறது.

பொதிகை மலையும்
சதுரகிரியும்
கருவூராரின்
தெய்வ வலிமையைப்
பறை சாற்றும்
திருமலைகள்.

கருவூரார்
ஒரு 
பிரம்மஞானி.
சனி பகவானின்
அம்சம்.
வணங்குவோர்
தோஷம் அகலும்.
வாழ்வு சிறக்கும்!

ஓம் நமசிவாய!

சித்தர் கருவூரார் திவ்விய சரித்திரம் (முற்றும்)


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - கருவூரார் (பாகம் 1)

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - போகர் பிரான் (பாகம் 5)

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - சதாசிவ பிரம்மேந்திரர் (பாகம் 4)