மூர்க்க நாயனார் புராணம் (பாகம் -2) - ஸ்ரீ நந்தீஸ்வரர் அருளியது

 

63 நாயன்மார்கள் வரலாறு

ஸ்ரீ நந்தீஸ்வரர் அருளிய

மூர்க்க நாயனார் புராணம் (பாகம் -2)

 



- மாரி மைந்தன் சிவராமன்

இயற்கையாகவே ஜீவகாருண்யத்தில்
சிறந்தோங்கிய
தொண்டை நாட்டில்
திருவேற்காடு திருத்தலத்தில்
ஒரு வேளாளர் குடும்பம்.
 
குடும்பத் தலைவர்
சங்கரன்.
இல்லக்கிழத்தி தாட்சி.
 
இருவருக்கும்
இரு குழந்தைகள்
இருந்த போதிலும்
இறைவனிடம்
வேண்டிப் பெற்றனர்
மூன்றாவது மகவை.
 
அவனுக்கு ஆசையாக
பெயரிட்டனர்
மாயோன்
எனும் திருப்பெயரை.
 
பேருக்கு ஏற்றார் போல்
நடைபயிலும் வயதிலேயே
கொஞ்ச நேரம் அங்கு
கொஞ்ச நேரம் இங்கு
என்று வீட்டுக்குள்ளும்
காடு கழனிக்குள்ளும்
ஒரு கணத்தில் ஒளிந்து
யார் கண்ணுக்கும்
அகப்படாமல்
மாயம் செய்வான் மாயோன்.
 
கல்வி சாலைக்கு
அனுப்பினர் பெற்றோர்.
ஏனோ கல்வி
அவ்வளவாக
வாய்க்கவில்லை.
 
ஆனால்
அவன் வாய்த்துடுக்கு
அறிவோடு இருந்தது.
 
ஐந்து வயதிலேயே
வீட்டில் குவிந்திருக்கும் தானியங்களை
எடுத்துச் சென்று
நீரில் இருக்கும்
மீன்களுக்கும்
தரையில் தாவும்
தவளைகளுக்கும்
ஓடி ஒளியும்
நண்டுகளுக்கும் .
பறக்கும்
காக்கைக்கும்
புறாக்களுக்கும்
கொத்த வரும்
கோழிகளுக்கும்
ஆட்டம் காட்டும் அணில்களுக்கும்
உணவிடுவது அவனுக்கு விருப்பமாய் இருந்தது.
 
ஒரு நாள்
தந்தையிடம் கேட்டான்,
 "அப்பா.... மலை போல் குவிந்திருக்கும்
தானியங்களை
நமக்குப் போக
பிறருக்கு
கொடுத்தால் என்ன?
அவர்தம் பசிப்பிணி நீங்குமே !
 
வீணாய்
ஒருவரிடத்தில்
செல்வம் குவிந்தால்
உலகுக்கு என்ன பயன்?"
 
தந்தை
சற்றே கோபப்பட்டாலும்
மகனின்  தர்க்கம் கேட்டு அகமகிழ்ந்தார்.
 
பசித்த வயிறுக்கு
சோறிடுவது
அன்று முதல்
தொடங்கியது.
காணும் ஜீவர்கள்
அனைவருக்கும்
உணவிட்டான்.
பசி தீர்த்தான் .
 
பரமன்
பார்வையில் பட்டான்.
பாமரன் பெயரை
நினைவில் குறித்து
புன்னகைத்தார் பரமேஸ்வரன்.
 
திருவிளையாடல்
அரங்கேறத் துவங்கியது.
 
ஒரு நாள் மாலை.
வயல் வேலை முடித்துவிட்டு
வீடு திரும்பும் வேளை.
 
ஓரிடம் களிப்பின்
உச்சத்தில்
சதிராடக் கண்டான்
மாயோன்.
 
உள்ளே ஊரின்
பெரிய செல்வந்தர்கள்
ஏதோ ஒரு விளையாட்டு
விளையாடியபடி
பேசிச் சிரித்து
மகிழ்வோடு இருந்தனர்.
 
உள்ளே சென்று
பார்க்க விரும்பினான்.
 
ஆனால் அவனை
அனுமதிக்க மறுத்தார்கள்.
 
காரணம் கேட்டான்.
"நீ சிறு பிள்ளை....
இங்கே எல்லாம் வரக்கூடாது."
 
ஏனென்று கேட்டான்.
" இது சூதாட்டம்.
 இந்த வயதில் இது புரியாது."
 
பிடிவாதமாக
விதவிதமாக
தர்க்கம் செய்தான்.
 
"வயது வந்த பின்பு
விளையாடி மகிழலாம்.
இப்போது ஓடிவிடு.
இது உயர்ந்த விளையாட்டு"
என்றார் ஒரு தனவான்.
 
தர்க்கம் தொடர்ந்தது.
" பெரியவன் ஆனவுடன் வா."
விரட்டி அனுப்பினர்.
 
 மீண்டும்
18 வயதில்
அவ்விடம் வந்தான்.
அப்போதும் மறுத்தார்கள் தனவான்கள்.
 
 "தம்பி....
இது தனவான்கள்
விளையாடும் விளையாட்டு. சதுரங்கம் என்பார் இதனை.
 
விளையாடுவோர்
பெரிய செல்வந்தர் என்பதால் வெற்றி தோல்வி
எவருக்கும் இல்லை.
இன்பமோ துன்பமோ
யாருக்கும் நேராது.
 
ஒருவரது பொற்குவியல்
கொஞ்சம் குறையும்
கொஞ்சம் கூடும்.
யாரும் பணக்காரரோ
ஏழையோ ஆகிவிட மாட்டார்.
மகிழ்வும் தோழமையுமே
இதன் நோக்கம்.
 
எவருக்கும்
துன்பம் இல்லை என்பதால்
இது ஓரு நல்ல விளையாட்டு.
இது ஒரு நற்சூது.
 
நீ அவ்வளவு
பெரிய செல்வந்தன் இல்லை.
போய் உன் விவசாயம் பார் ஓடிப்போ..."
உதைக்க வந்தார்
வயதில் பெரியவர் ஒருவர்.
 
விடாமல்
தொடர்ந்து வந்தான்.
"ஐயா.... எவருக்கும் தீதில்லா களிப்பூட்டும்
இக்கலையைக்
கற்க ஆசை.
 
சூட்சமத்தைப்
புரிந்து கொள்ள
அனுமதியுங்கள்."
 
"ஒரு மாதம் வா .
 நீ கற்க
முப்பது நாள் போதும்.
 பின் இப்பக்கம் வரக்கூடாது உறுதிப்படக்கோரி
அனுமதித்தார்கள்.
 
 30 நாளில்
விளையாட்டாய்
கற்றுத் தேர்ந்தான்.
நுட்பம் அறிந்தான்.
 
அதன் பின்னர்
அப்பக்கம்
செல்லவில்லை.
 
நற்சூதை
மறந்து போனான்.
சிவசிந்தனையில்
ஆழ்ந்து போனான்.
 
நாளுக்கு நாள்
பசிப்பிணி தீர்த்தான்.
ஊர்வன நடப்பன
நீந்துவன பறப்பன
என பேதமின்றி
உணவு படைத்தான்.
 
ஏழை எளிய மக்களுக்கும் உழைத்துக் களைத்தோருக்கும்
பசித்து துடித்து வாடியோருக்கும் சிவன் மீது பற்று கொண்ட அடியார்களுக்கும் 
அறப்பணி தொடர்ந்தான்.
 
அவனை எல்லோரும்
கொண்டாடி மகிழ்ந்தனர்.
 
கொஞ்ச காலத்தில்
அவனது கொண்டாட்டம்
திண்டாட்டம் அடைந்தது.
 
வாரி இறைத்த வள்ளலின்
சொத்து பத்துக்கள்
மொத்தமாக காலி.
 
அடுத்த வேளை
அன்ன தானத்திற்கே
தவிக்க வேண்டியதாயிற்று.
 
'என்ன செய்வேன் ?
என்னை நாடி வருவோருக்கு
இனி எப்படி பசியாற்றுவேன்' அழுதபடி ஓடி வந்தான்.
ஒரு சிவாலயம்
குடி புகுந்தான்.
 
அடைக்கலமான
மாயோனுக்கு
ஆதிநாதர் வழி ஒன்று
சொல்லாமல் சொன்னார்.
 
"சூதாடு.. நற்சூதாடு..."
 
சிவபிரானின்
குறிப்பை உணர்ந்த
மாயோன்
ஒரு முடிவெடுத்தான்.
 
நற்சூதாடி
திக்கெங்கும்
பசியோடு வாழும்
பசியாளர்களுக்குப்
பசி போக்குவேன் '
மனதில் சபதமிட்டான்.
 
எங்கு செல்வது
எனப் புரியாது
அருகிருந்த
ஊருக்குச் சென்றான்.
 
அந்தக் காலத்தில்
அனைத்து ஊர்களிலும்
சிவாலயத்தின் அருகில்
சத்திரம் ஒன்று இருக்கும்.
அதற்கு கொஞ்சம் தள்ளி
சூதாடும் இடமும் இருக்கும்..
அது அவனுக்கு
வசதியாய் போயிற்று.
 
காலையில்
கடவுளை வணங்கி விட்டு
மதியம் சத்திரத்தில்
உணவு உண்டு
தூங்கிவிட்டு மாலை
சூதாட்டம் விளையாடலாம்.
 
சிவாலயத்தில்
அவன் கேட்ட அசரீரி
அவனை
உற்சாகப்படுத்தியது.
 
*தர்மம் செய்வதற்கு
தகுதி வேண்டாம்.
தர்மம் செய்வதற்கு
கால நேரம் வேண்டாம்.
தர்மம் செய்வதற்கு
வயது ஏதும் வேண்டாம்.
தர்மம் செய்வதற்கு
தொழில் தகுதி வேண்டாம்.
தர்மம் செய்வதற்கு
எண்ணம் இருந்தால் போதும்.*
 
அவன் மனது சரி
என்ற போது
அவனது முகம்
ஒளி வீசத் தொடங்கியது .
வசீகரம் வசீகரித்துக் கொண்டது.
உடலெங்கும் புதுப்பொலிவு தோன்றியது.
 
இடையில்
பழக்க தோஷமாக
குறுவாளினைத்
தவிர ஏதுமில்லை.
கைவசம் குறைந்தபட்ச பொற்காசுகள் கூட இல்லை.
 
ஆயினும்
பொன்மேனியனின்
பேரருள் நிறைந்திருந்தது.
 
அங்கிருந்த
தனவான்கள்
அரசகுமாரன் தான்
மாறுவேடத்தில்
வந்திருக்கிறான் என்று
அஞ்சியபோதிலும்
அரசகுமாரனின்
அத்யந்த நண்பராக
ஆகிக்கொள்ள
இது சந்தர்ப்பம் என
வெற்றிலைத்
தாம்பூலம் வைத்து
வரவேற்றனர்.
 
சூதாட்டம் தொடங்கியது.
அவனிடம் தோற்பதைக் கூட பெருமிதமாகக் கருதினர்
செல்வச் சீமான்கள்.
 
அதற்கு மேலாக
சூதின் சூட்சமத்தை
முழுதாக அறிந்திருந்த
மாயோன்
ஆட்ட முடிவில்
பொற்குவியலோடு
விடைபெற்றான்.
 
சத்திரத்திற்குப்
படுக்கச் செல்லும் போது
காவல் காப்போன்
"பார்த்துப்பா...
 இங்கு திருடர் பயம் அதிகம்.
பெரிய இடத்துப்
பிள்ளை போல் இருக்கிறாய்.
பத்திரமா இரு ..."
என்று பயமுறுத்திச் சென்றார்.
 
பாவம் மாயோன்.
தனது சொத்து
என்று இருந்தால் கூட
பயந்திருக்க மாட்டான்.
ஜெயித்த பொற்குவியல்
சிவன் சொத்து என்பதால்
விடிய விடிய தூங்கவில்லை.
 
பொற்குவியல் மூட்டையைத் தலைக்கு வைத்து
தூங்குவது போல் தூங்கி
உறக்கம் இன்றி
உறங்கிப் போனான்.
 
மறுநாள் காலை
மாயோன்
சென்ற ஊர்
திருக்குடந்தை எனும்
கும்பகோணம்.
 
நதியில் நீராடி
நாயகனைத் தேடி
இறையின்
அடி பணிந்தான்.
 
"ஐயனே...
எனக்கு ஒரு வரம்
மட்டும் தான் வேண்டும்.
சூதாட வேண்டும்.
வெற்றி பெற்று
பசியாற்ற .வேண்டும்"
 
அப்போதும் மட்டுமல்ல
எப்போது அவன் எந்தக்
கோவிலுக்குச் சென்றாலும்
பொற்குவியல்  மூட்டையை
காலடியில் வைத்து
கட்டை விரலால்
முடிச்சை மிதித்தவாறு பாதுகாப்பதில் கவனமாக இருப்பான்.
 
அவ்வளவு
உஷார் பேர்வழி.
பொற்குவியல்
இருந்தால் தானே
உலகுக்கு உணவு
படைக்க முடியும் !
 
அது சிவன் சொத்து.
தனக்கு கூட அதில்
பங்கு இல்லை என
நினைத்து பாதுகாப்பான்.
 
மதியம்
அவன் பொற்காசுகளை
சத்திரத்தின்
சமையற்காரரிடம் கொடுத்து அறுசுவை உணவுக்கு
ஆலோசனை சொன்னான்.
 
சுவை தப்பினும்
செலவு கணக்கில்
தப்பிருப்பினும்
உன் தலை தப்பாது.
இடைவாளைக்
காட்டி மிரட்டி வைத்தான்.
அவ்வூர் அதுவரை கண்டிராத அன்னதானம் செய்தான்.
 
உள்ளமெல்லாம் அன்பு
குணத்தில் மட்டும் மூர்க்கன்
என்றார்கள் சமையல் குழுவினர்.
 
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு பயணம்.
ஒவ்வொரு ஊரிலும்
அருள் பெறஆலயம்.
மதியம் அன்னதானம்.
மங்கிய வெளிச்சத்தில்
பொங்கி வழியும் பொற்குவியல்.
 
மாயோனின்
அறப்பயணத்தில்
ஒரு நாள்
அறம் பெற
வந்தது
திருவாரூர்.
 
பிறவிப் பயனை
அடைந்தது போல்
பரவசப்பட்டான்.
 
"பார் போற்றும் தேவனே!
ஐயனே!! ஈசனே !!!
தியாகராஜனே!!!!
உன்னிடம்
ஒரே வரம் தான் கேட்கிறேன். காலமெல்லாம்
சூதாட்டத்தில்
கடைசிவரை
துணை நிற்க வேண்டும்."
 
கோவிலில்
விழுந்து புரண்டு
கைகூப்பித் தொழுதான்.
 
அப்போது
திருவாதிரைக் காலம்.
கணக்கற்ற மக்கள் கூட்டம்.
 
சமயல் செய்பவர்களை
அழைத்து
பொற்காசுகளைப்
பெருமளவில் தந்து
ஒரு மாத காலம் தொடர்ந்து
அன்னமிடக் .
கேட்டுக்கொண்டான்.
 
"கருணை வள்ளலே ....!"
என்று அவர்கள் .
போற்றிப் புகழ்ந்த போது,
 
"கணக்கு வழக்கு
கச்சிதமாய்
இருக்க வேண்டும்.
இடையில் வந்து
சோதனை இடுவேன்.
தப்பிருந்தால்
உம் தலை தப்பாது.
 என் இடைக் குறுவாள்
குத்திக் கொலை செய்யும்.
ஜாக்கிரதை...!"
 
கோப வார்த்தைகளைக் கொட்டினான்.
அவன் நல்நோக்கம் அறியாத
ஆரூர்காரர்கள் அவன்
பொல்லாதவனாக இருக்கிறானே
என்று பொறுமி நகந்தனர்.
 
அப்படித்தான்
அவன் ஒரு முறை
இன்னொரு ஊர் சென்றான்.
 
அவ்வூர்
செல்வச் சீமான்கள்
சூதாட்டத்திற்கு
கவர்ச்சி சேர்க்க
பேரழகுப் பெட்டகங்களை
நடனமாடச் செய்து
குதூகலிப்பது வழக்கம்.
 
அரசகுமாரன் போலிருந்த மாயோனைத்
தத்தம் தனித் திறமையால்
மயக்கி அடைய
நடன மகளிர்
போட்டி போட்டுக்
கொண்டு காத்திருந்தனர்.
 
சூழல் கண்டு
வெகுண்டெழுந்தான்
சினத்தோடு மாயோன்.
பெரும் சீற்றம் காட்டினான்.
 
ஆடிப் போயினர்
அத்தனை
பெரிய மனிதர்களும்.
பதில் பேசக்கூட
பயந்து ஒதுங்கினர்.
 
"கூத்தரசனே விரும்பும்
கூத்து தானே?!"
ஏக்கத்துடன் கேட்டது
ஓர் எதிர்பார்ப்புக் குரல்.
 
"செல்வச் செழிப்பில்
எல்லா களிப்பும்
ஏகமாய் அனுபவிக்கும்
பெருந்தனக்காரர்களே!
 
இதெல்லாம்
மாயை.
மகிழ்ச்சியும் மாயை.
மங்கையரும் மாயை.
 
நீங்களும் நானும்
ஏதுமில்லை.
யாரும் இல்லை.
 
சூதும் வாதும்
வஞ்சகமும்
வெற்றி இல்லை.
 
நாம் அனைவரும்
சிவனின் பிள்ளை.
உலகம் முழுதும்
அவனது எல்லை.
 
நம் சொத்து கூட
அவனின் சொத்தே .
சிவன் சொத்து.
குல நாசத்திற்கு
உள்ளாகாதீர் !
 
மங்கை தரும் சுகம் மாதொருபாகனின்
நக நுனிக்குக்குச் சமம்.
 
பெண் ஆட்டம் போதும்.
சிவன் ஆட்டம் பாருங்கள்
இப்பித்து அடங்கும்.
நற்முத்தி கிட்டும்."
 
முரட்டுத்தனமாய்
கடுகடுத்துச்
சொல்லிவிட்டு
வெளியேறினான்
வெள்ளிப் பனிமலையினனின்
பிம்பம் போலிருந்த மாயோன்.
 
அவன்
தலை மறைந்த பின்னர்
அங்கிருந்தோர்
ஒரு மூர்க்கனின்
முட்டாள்தனமான
முரட்டுப் பேச்சு
என்று கிசுகிசுத்தபடி
நடன மாதுக்கள் மீது
காமக்கண் பதித்தனர்.
 
காமத்தை வெறுத்த
மாயோனின்
அப்போதைய வயது 47.
 
அடுத்த ஊர்
ஆன்மிகப் பயணம்
தொடங்கியது.
 
வழியில் வந்தது
சிதம்பரம்.
 
சிவகங்கை தீர்த்தமாடி
கனகசபை மீதேறி
ஆடல் அரசனின்
அற்புத நடனத்தை
தரிசித்து மகிழ்ந்தான்
நற்சூதாட்ட மாயோன்.
 
நடனமாடும் நடராஜரின்
அருட்பெரும் ராஜபார்வை
சூதாடும் மாயோனுக்கு
வேண்டியபடி கிடைத்தது
 
அவனிருந்த காலத்தில்
சிதம்பரத்தில் நடந்த
அன்னதான வாசம்
அம்பலத்தரசனையே
அன்னம் பாலிக்க
ஆசையுறச் செய்தது.
 
அதன் பிறகு
ஒரு நாள்.
திக்கும் திசையும்
தெரியாமல்
கால் போனபடி
ஏதோ ஒரு ஊருக்கு
ஓர் அடர்காடு வழியாக
போய்க் கொண்டிருந்தான்
கர்மவீரன் மாயோன்.
 
மாலைப் பயணத்தில்
மாலை மயங்கி
இருள் படரத் தொடங்கியது.
 
அடுத்த நாள்
அன்னதானம் பற்றி
அவதானித்துக் கொண்டே நடைபோட்டான்
சற்றுமுன்னர்
சிதம்பரத்தில்
நம்பெருமானின்
பேரருள் பெற்ற மாயோன்.
 
திடீரென்று
இருளும் மழையும்
திடுமெனப் படரத்
தொடங்கியது.
 
சில நொடிகளில்
கும்மிருட்டும் கனமழையும்
அடுத்த அடி வைக்க முடியாத
அச்சத்தைத் தந்தது.
 
வானம்
பொத்துக் கொண்டு
பெரிய ஏரி கொட்டியது போல்
பெய்த மழையால்
நீர்மட்டம் பாதம் கெண்டை
எனத் தொடங்கி
முழங்கால் அளவு
உயர்ந்து உயிர்ப் பயம் தந்தது.
 
மாயோனது
மூர்க்கத் தனமும்
முரட்டுப் பேச்சும்
இடையில் புடைத்திருந்த
கெட்டிக் குருவாளும்
இயற்கையிடம்
என்ன செய்து விட முடியும் ?
 
கும்மிருட்டு காரணமாக
அரை அடிக்கு மேல் ஏதும் தெரியவில்லை.
வெளிச்சம்
வந்தால் பார்க்கலாம்.
வேறு எதுவும் என்றால்
இறையடி சேரலாம்
என்ற முடிவுக்கு வந்து விட்டான்
பல்லுயிர் காத்த
நல்லுயிர் மாயோன்.
 
தூரத்தில்
எங்கோ இடி முழக்கம்.
காடெங்கும்
விலங்குகளின்
மரண ஓலம்.
 
"ஈசனே காப்பாய் !
இன்னும் ஈகை
பாக்கி இருக்கிறது"
தந்தி அடித்தன
பதற்றத்தில் பற்கள்.
உதவிக்கு உதடுகள் வேறு.
 
அப்போது கூட
மாயோனின் கால் நுனியில்
கவ்விய படி
பெரிய பொற்குவியல்
மூட்டை .
 
சற்றும்
எதிர்பாராத விதமாக
எதிரே ஒரு மின்னல்
வெளிச்சம் காட்டியது.
 
வானில் பிறந்த
மின்னல் ஒளி
ஆங்கிருந்த
கோயில் ஒன்றின்
கோபுரக் கும்பத்தில் பட்டு
வெளிச்சம் கொஞ்சம் பரவியது.
 
அது போது ஒரு குரல்
ஆசரீரி போல்
மாயோனின் காதுகளில்
பேரன்பாய் ஒலித்தது.
 
"கவலைப்படாதே ....
நான் இருக்கிறேன்..."
 
"எங்கே இருக்கிறீர்கள் ?"
 
"எதிரே பார்.....
ஒரு வில்வ மரம் தெரிகிறதா ?
அங்கு இருக்கிறேன்....
நீ விரைந்து இங்கு வா"
 
"எப்படி வருவது ?
முழங்காலுக்கு
மேலே தண்ணீர்.
நடுவில் ஏதேனும்
குழியிருந்தால்
ஜல சமாதி தான் ..."
அப்போதும் தர்க்கம்.
 
"நீ வாப்பா
நீர் உனக்கு வழி விடும்"
 
நம்பிக்கையோடு
அடி வைத்தான்.
குரல் கொடுத்த
இறைவனின் கருணையால்
நீர் விலகி
தடம் காட்டியது
அந்த கும்மிருட்டில்.
தவளைகளும் நண்டுகளும்
நீர்வாழ் உயிரினங்களும்
சப்தமிட்டு வரவேற்றன.
 
எப்படியோ
தட்டுத் தடுமாறி
வில்வமரத்தருகே
வந்து விட்டான்
ஆன்மநேய மாயோன்.
 
கொட்டும் மழையில்
மரம் விரித்த கிளைகள்
மழைத்துளிகள்
படாமல் காத்தன.
மரத்தில் மழைக்கு .
ஒதுங்கி இருந்த
பறவை இனங்கள்
மாயோனைக கண்டு
தத்தம் குரல்களில்
கானமிசைத்து
வரவேற்றன.
 
வில்வ மரத்தை
நெருங்கிய மாயோன்
மரத்தைச் சுற்றி
ஆரத் தழுவினான்.
 
துளாவிய கைகளில்
சிலை போல் ஒன்று
உணரப்பட்டது.
 
கடவுளின்
திரு உருவமோ
என கருதிய மாயோன்
கைகளைப் படர விட்டான்
 
அவனது
கைகள் பட்ட இடம்
கற்சிலை அல்ல
உயிருள்ள மனிதரின்
கன்னமென உணர்ந்தான்.
 
இன்னும் நெருங்கினான்.
அது மனிதர் அல்ல
கடவுள் என உணர்ந்தான்.
அதுவும் தன் வாழ்வை
வழிநடத்தும் சிவபிரான்
எனப் புரிந்து கொண்டான்.
 
அருகிலே
ஒருவர் இருப்பது தெரிந்தது.
அது யாராக் இருக்கும் என யோசிக்கும் கணத்திலேயே
சாட்சாத் உமையவள்
எனப் புரிந்து
பூரித்து போனான்.
 
சிவபிரானின்
சிகையிலிருந்த
பிறையின் வெளிச்சம்
அச்சூழலுக்கு
போதுமானதாய் இருந்தது.
 
சிவன் தான்
கனிவுடன் பேசத்
தொடங்கினார்.
 
"அன்பனே....!
உன்
ஜீவகாருணியப் பணியை
மெச்சியே
சோதனை செய்து
கொஞ்சம் விளையாடிவிட்டு இப்போது உனக்கு
காட்சி தருகிறேன்.
 
பாரேன்...அன்னைக்கும்
உன் மேல் அலாதி பிரியும்.
 
உலகுக்கே உணவளித்த
உனக்கு அன்னம் தர
நாங்கள் காத்திருக்கிறோம்."
 
சிவபெருமானின்
சில்லென்ற வார்த்தை
அந்த நொடியே
மாயோனுக்கு
கோபத்தை மூட்டியது.
 
"என்ன இருவரும் விளையாடுகிறீர்களா ?
நீங்கள் இப்போது
எனக்கு அன்னம் தருவது
நான் செய்த செயல்களுக்கு கைமாறா ? பரிகாரமா !"
எல்லாம் வல்ல இறைவனிடமே பொல்லாத கோபம் காட்டினான்.
 
அதற்குள்
அன்னை பார்வதி தேவி
ஒரு வெள்ளிக் கிண்ணத்தில்
அன்னத்தை நிரப்பி
மாயோனிடம் நீட்டினாள்.
 
"ஒன்றைப்
புரிந்து கொள்ளுங்கள்.
 
நீங்கள் போற்ற வேண்டும்
உலகம் பாராட்ட வேண்டும்
நிறைய புண்ணியம் கிடைக்கும் என்பதற்காக நான் அன்னதானங்களும்
தான தர்மங்களும்
செய்யவில்லை"
 
என்றபடி
அன்னை தந்த கிண்ணத்தை
வாங்க மறுக்கும் வகையில்
அன்னையின்
கொடுக்க வந்த
கைகளைத்
தட்டி விட்டான்.
 
வந்ததே கோபம்
மாதொருபாகனுக்கு!
 
"ஏய்..…மூர்க்கனே!
 
என்ன பேசுகிறாய் ?
யாரிடம் பேசுகிறாய்
என்று கூட தெரியாத
மூர்க்கத்தனம்
கொண்டவனாக
இருக்கிறாயே?
 
தேவி ஒன்றும்
நீ இதுகாறும்
ஈந்ததற்காக தரவில்லை.
உன்னை ஈன்றதற்காக தருகிறாள்.
புரிந்து கொள்ளடா.... மூர்க்கா !"
 
முக்கண்ணரின்
கோப வார்த்தைகளில்
பயந்து போன மாயோன்
இறைவனின் ஆணைப்படி
அன்னையிடம்
கிண்ணத்தைப் பெற
கை நீட்டினான்.
 
இப்போது
உலகாளும் உமையவள்
அவன் அச்சத்தோடும்
மிரட்சியோடும் பார்த்திருக்க
காமதேனுவின் பால் எடுத்து
அன்னத்தில் கலந்து
பாலன்னமாக்கி 
அவன் அருகில் வந்தாள்.
 
அவன்
அன்னை தரும்
அன்னம்
பெற கைநீட்ட
அவன் கைகளைத்
 தட்டி விட்டு
அருட் பார்வையோடு
மறுத்து
அவள் கைகளால்
மாயோனுக்கு ஊட்டி விட்டாள்.
 
அப்போது
அதை ரசித்தபடி
சிவபிரான் தலைகுனிய
அவரது சிகையில் இருந்து
நடப்பது அனைத்தையும்
கவனித்தபடி இருந்த
கங்காதேவி புனித நீர் சுரந்து
அருள் பாலித்தாள்.
 
அதுபோது வானத்தில்
தேவர்கள் தோன்றி
வனத்தில் இருக்கும்
இறைவன் இறைவியரை
வணங்கி
பூமாரி பொழிந்தனர்.
 
ஆகாயத்தில் இருந்து
ஒரு பாரிஜாத மலர்
மாயோனின் சிரத்தில்
விழுந்து ஆசீர்வதித்தது.
 
இனி
இறைவனும் இறைவியும்
தம்பதி சமேதரராய்
அருட்காட்சி தந்து
ஆட்கொண்ட
மாயோனை
அவன் என்றோ
மாயோன் என்றோ
அழைக்கக் கூடாதல்லவா !
 
இனி
அவன் இல்லை......
அவர்.
 
அவரை இறைவன்
பெயர் சொல்லி
அழைத்தவாறே
மூர்க்க நாயனார்
என்று நாமும் அழைத்து
வணங்குவதே
சாலச் சிறந்தது.
 
மூர்க்க நாயனார்
இறை தம்பதியினரை
கண்ணீர் மல்க
பாதம் தொட்டு
வணங்கிவிட்டு
வில்வ மரத்தை
வலம் வந்து துதித்தபடி
கயிலை நாதரோடு
சிவபுரிக்கு பயணமானார்.
 
அந்த
பரிசுத்த வில்வ மரம்
இப்போது கூட
குடந்தை கும்பேஸ்வரர் திருக்கோயிலில்
கோயிலின் உட்புறம்
தெற்கு பக்கத்தில்
ஒரு சாட்சியாய்
அருளாட்சி செய்து வருகிறது.
 
மூர்க்க நாயனார்
இறையோடு கலந்தது
ஐப்பசி மாதம்
கார்த்திகை நட்சத்திரத்தில்.
இந்நாளே குரு பூஜைக்கு
உகந்த நாள்.
குருவருளோடு திருவருளும்
கிடைக்கும் நாள்.
  
(மூர்க்க நாயனார் புராணம் நிறைவு )

கருத்துகள்

  1. பசியுற்றோருக்கு உணவளிப்பது சிறந்த மனிதப் பண்புகளில் ஒன்றாகும். அத்தகைய தொண்டினை எந்தவித எதிர்பார்ப்புமின்றி, தன் வாழும் நாள் முழுதும் நற்சூதாடி செய்து, பின் சிவத்தை அடைந்த மூர்க்க நாயனார் என்னும் பெருமகானின் புராணத்தைப் படிக்கும் போதே நம் கண் முன்னே திரையிட்டுக் காண்பிக்கிறார் ஐயா சிவராமன் அவர்கள்.

    சேக்கிழார் மூர்க்கர் பற்றி மொழிந்த பெரியபுராணச் செய்திகளைப் பொருள் மாறாமல் தம் அருமையான வார்த்தை நடையில் எளியோர்க்கும் விளங்கும் வண்ணம் இயல்பாக எடுத்தியம்புகிறார்.

    மூர்க்க நாயனார் பற்றிய வரலாற்றினை உலகோர்க்கு எடுத்துரைக்க எண்ணிய அவரது மேலான அவாவின் காரணத்தால், ஐயா அவர்களுக்கு நந்தீஸ்வரர் கருணை கொண்டு இப்பெரும் புராணத்தை விரித்துரைத்தார்.

    சூதில் நற்சூது எது? என்று அவருக்குள் முளைத்த கேள்வியின் பதிலே இன்று அவர் படைத்துள்ள இந்த புராணத்தின் மூலமாகும்.

    மேன்மைகொள் சைவ நீதி இம்மேதினியில் விளங்கச் செய்த அறுபத்து மூவருள் ஒருவரான மூர்க்க நாயனார், ஜீவராசிகளின் பசிப்பிணியைக் காணவொன்னாது, அதைப் போக்க வேண்டும் என்ற மன உறுதியினால், ஆடல் வல்லானை வேண்டி நற்சூதாடி பொருள் ஈட்டி, அதை அவர் படைத்த உயிர்கட்கு உணவாக்கி உவந்தளித்தார்.

    இதையே தம் வாழ்நாள் கடமை எனச் செய்த அவர் மாட்சியைக் கண்ணுற்ற கூத்தபிரான், அன்னையோடு அவருக்குத் திருவமுது புகட்டினார். அது கிடைத்தற்கு அரிய பேறன்றோ!

    எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி செய்யும் செயலானது இறைவனை மகிழ்விக்கும் என்பதற்கு இப்பெருமகனார் வாழ்வு ஒரு பெரும் சாட்சி.

    இதை எளிய தமிழில் எழுதி, மூர்க்க நாயனாரின் மாண்பைத் தம் ஒவ்வொரு வார்த்தையாலும் படிப்போரை மெய் சிலிர்க்க வைக்கிறார் ஐயா சிவராமன் அவர்கள்.

    எதிர்கால தலைமுறையினர் கட்டாயம் அறிய வேண்டிய பெரிய புராணச் செய்திகளை இந்த காலத்திற்கு ஏற்றாற்போல் நமக்கு வழங்கும் ஐயாவின் சிவத்தொண்டு சிறந்து விளங்க எல்லாம் வல்ல பரம்பொருளை வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகவும் நன்றி. இன்னும் நிறைய எழுத வேண்டும் என்ற ஆர்வத்தை உங்கள் விமர்சனம் தூண்டுகிறது.

      நீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - கருவூரார் (பாகம் 1)

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - போகர் பிரான் (பாகம் 5)

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - சதாசிவ பிரம்மேந்திரர் (பாகம் 4)